ஜெயராஜ்- பென்னிக்ஸ் சித்ரவதை.. கொன்றவர்களை சத்தியமா விடக் கூடாது- ரஜினிகாந்த் காட்டம்
சென்னை: சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொன்றவர்களை சத்தியமாக விடவே கூடாது என ரஜினிகாந்த் காட்டமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்துக் கண்டித்த பிறகும் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது என மிகவும் ஆக்ரோஷமாக ரஜினி தெரிவித்துள்ளார். மேலும் #சத்தியமா_விடவே_கூடாது என்ற ஹேஷ்டேக்குடன் குறிப்பிட்டுள்ளார்.
சாத்தான்குளம் காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யலாம்.. சிபிசிஐடிக்கு நீதிபதிகள் அதிரடி உத்தரவு
காவல் நிலையம்
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் செல்போன் கடை நடத்தி வந்தார். இவர்கள் கூடுதலாக கடை திறந்து வைத்திருந்ததாக கூறி இருவரையும் போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதையடுத்து விசாரணை கைதியாக கோவில்பட்டி சிறைக்கு மாற்றப்பட்ட போது அவர்கள் இருவரும் அடுத்தடுத்து இறந்துவிட்டனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
மாஜிஸ்திரேட்
இதன் தொடர்ச்சியாக சாத்தான்குளம் விவகாரம் குறித்து விசாரிக்க மாஜிஸ்திரேட் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு பெண் காவலர் நேரடி சாட்சியம் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் விடிய விடிய லத்தியால் அடித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிபிசிஐடி போலீஸ்
இதையடுத்து சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யும்படி சிபிசிஐடி போலீஸாருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ரஜினிகாந்த் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார். போலீஸாரை கண்டித்து ஆக்ரோஷமாகவும் அவர் தனது வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.
|
அழுத்தம்
ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்பு குறித்து இரு தினங்களுக்கு முன்னர் அவர்களது குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஜினி ஆறுதல் கூறினார். இந்த நிலையில் நேற்று பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான நிலையில் ரஜினி கூறியிருக்கும் கருத்து நிச்சயம் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.