ரஜினிகாந்தை உலுக்கி எடுத்த அமமுக வெற்றிவேல் மரணம்.. மீளமுடியாமல் தவிப்பு
சென்னை: அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனாவால் காலமான செய்தி நடிகர் ரஜினிகாந்தை உலுக்கி எடுத்துவிட்டதாம். வெற்றிவேல் மரணத்தை நம்ப முடியாதவராக தவித்து வருகிறாராம் ரஜினிகாந்த்.
1990களின் நடுவில் சென்னையில் காங்கிரஸ் முகங்களாக கோலோச்சிய இரட்டையர்கள் வெற்றிவேலும் கராத்தே தியாகராஜனும். சென்னை மாநகர மேயராக அப்போது மு.க.ஸ்டாலின் பதவி வகித்த காலம் அது.
மூப்பனாரின் தளகர்த்தர்கள்
தமிழக அரசியலில் பெரும் பூகம்பமாக திமுக- தமாகா- ரஜினி ஆதரவு உருவான தருணம். அப்போது மறைந்த ஜிகே மூப்பனாரின் தளகர்த்தர்களாக- ரஜினிகாந்துக்கான தூதுவர்களாக இருந்தவர்கள்தான் வெற்றிவேலும் கராத்தே தியாகராஜனும்.
ரஜினியுடன் நட்பு
கால ஓட்டத்தில் வெற்றிவேல் அதிமுக, அமமுக எனவும் கராத்தே தியாகராஜன் காங்கிரஸ்- காங்கிரஸில் சஸ்பெண்ட் எனவுமாக மாறிப் போனது. ஆனாலும் ஆத்மார்த்த நண்பர்களாக வெற்றிவேலும் கராத்தே தியாகராஜனும் திகழ்ந்தனர். அதே உறவை ரஜினிகாந்துடனும் நீடித்துக் கொண்டனர்.
ரஜினிகாந்தின் வாய்ஸ்
இதனால்தான் ஒரு கட்டத்தில் ரஜினிகாந்தின் வாய்ஸ் ஆகவே கராத்தே தியாகராஜன் கருதப்பட்டும் வந்தார். ரஜினிகாந்தின் தூதராக அண்மையில் அதிமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தியதும் கராத்தே தியாகராஜன்தான். வெற்றிவேலுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது முதல் ரஜினிகாந்துக்கு இடைவிடாமல் தகவல் கொடுத்து வந்தார் கராத்தே தியாகு.
வெற்றிவேல் மரணத்தால் ரஜினி ஷாக்
அதேபோல் வெற்றிவேலிடமும் கராத்தே தியாகராஜன் நாள்தோறும் பேசியும் வந்தார். ஒருகட்டத்தில் வெற்றிவேலின் உடல்நிலை மோசமானது.. பின்னர் அவர் காலமானார். கொரோனா பாதித்த நிலையில் வெற்றிவேல் மரணித்த போதும் அவருக்கு அஞ்சலி செலுத்தியது கராத்தே தியாகராஜன் மட்டுமே. அதேபோல் வெற்றிவேல் மரணமடைந்துவிட்ட செய்தியை இன்னமும் நம்பவே முடியாமல் அதிர்ச்சியில் இருக்கிறாராம் ரஜினிகாந்த்.