ரஜினி அப்படி பேசி இருக்க கூடாது.. பெரியார் எங்கள் வழிகாட்டி.. முதல்முறையாக கருத்து சொன்ன ராமதாஸ்!
பெரியார் தமிழ்கத்தின் அரசியல் வழிகாட்டி, அவரை பற்றி கருத்து கூறாமல் நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்து இருக்கலாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: பெரியார் தமிழ்கத்தின் அரசியல் வழிகாட்டி, அவரை பற்றி கருத்து கூறாமல் நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்து இருக்கலாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ. ராமருக்கு எதிராக பெரியார் பேரணி செய்தார். இதில் ராமருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. சீதை புகைப்படம் எடுத்து செல்லப்பட்டது .சோ மட்டும்தான் இதை தைரியமாக துக்ளக்கில் எழுதினார், என்று ரஜினி குறிப்பிட்டார்.
அவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தற்போது நடிகர் ரஜினி காந்த் விளக்கம் அளித்துள்ளார். அதில், பெரியார் பற்றி நான் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். சாரி. பெரியார் குறித்த கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது.பெரியார் குறித்து நான் பேசியது தவறானது கிடையாது, என்றுள்ளார்.
என்ன பதில்
இந்த நிலையில் பெரியார் குறித்த ரஜினியின் கருத்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார். அதில், பெரியார் என்பவர் பகுத்தறிவு பகலவன். அவர்தான் எங்களுக்கு அரசியல் வழிகாட்டி. தமிழக அரசியலில் அவர் மிக முக்கியமானவர். பெரியார் கருத்துக்கள்தான் தமிழக அரசியலில் இப்போதும் முக்கியமானதாக உள்ளது. அனைவரும் பெரியாரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மிக முக்கியம்
1971ம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் இந்து கடவுளான ராமர் இழிவுப்படுத்தப்பட்டதாக ரஜினி கூறியுள்ளார். அப்படி ரஜினி பேசி இருக்க கூடாது. பெரியார் பற்றி பேசுவதை ரஜினி தவிர்த்திருக்கலாம். எப்பொழுதுமே ரஜினி செய்தியாளரின் கேள்விக்கு எச்சரிக்கையாகவே இருப்பார். ஆனால் இந்த முறை அவசரப்பட்டு இப்படி பேசிவிட்டார்.
பெரியார் சிலை
பெரியார் சிலையை இதனால் சிலர் அவமதித்து வருகிறார்கள். சில இடங்களில் பெரியாரின் சிலையை உடைத்து உள்ளனர். இதை ஒரு போதும் எங்களால் ஏற்க முடியாது. இது போன்ற செயல்களை அரசு உடனடியாக தடுக்க வேண்டும். பெரியாரின் சிலைக்கு அவமரியாதை செய்வதை சகித்துக்கொள்ள முடியாது. இது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை.
அவமரியாதை செய்ய வேண்டும்
அவரது சிலைக்கு அவமரியாதை செய்பவர்களையும் உடனே கைது செய்ய வேண்டும். கடுமையான சட்டத்தை கொண்டோ, குறைந்தபட்சம் குண்டர் சட்டத்திலோ கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். அரசு இதை கவனமாக செயல்படுத்த வேண்டும். தமிழிலே தஞ்சை கோவிலுக்கு குடமுழுக்கு செய்யவேண்டும். தமிழ் நாட்டில் இருக்கும் கோவிலுக்கு தமிழில்தான் குடமுழுக்கு செய்ய வேண்டும், என்று ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.