ஜக்கரியாவுடன் சந்திப்பு.. இஸ்லாமிய தலைவர்களுடன் பேச்சு.. தனி வழியில் போகும் ரஜினி.. இதுதான் காரணமா!
இஸ்லாமிய தலைவர்களை நடிகர் ரஜினிகாந்த் வரிசையாக சந்தித்து வருவது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.
சென்னை: இஸ்லாமிய தலைவர்களை நடிகர் ரஜினிகாந்த் வரிசையாக சந்தித்து வருவது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.
Recommended Video
பெரும் எதிர்ப்பை மீறி குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த சில வாரங்கள் முன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது சட்டமானது. இதற்கு எதிராக நாடு முழுக்க பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. முக்கியமாக அரசியல் கட்சிகள் இடையே, கட்சிகளுக்கு உள்ளேயும் கூட இந்த சட்டத்திற்கு எதிராக பலர் குரல் கொடுத்து வருகிறார்கள்
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு பின் நாடு முழுக்க போர்க்களமாக மாறியுள்ளது. இந்த சட்டத்தை எதிரித்து டெல்லி, வண்ணாரப்பேட்டை தொடங்கி நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. சிஏஏ போராட்டம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கள் பெரிய சர்ச்சையானது.
அன்றே சொன்னோம்... திமுகவுக்கு ஷாக்- ரஜினிகாந்தை சந்தித்தனர் ஜமாஅத் உலமா சபை நிர்வாகிகள்
என்ன சொன்னார்
சிஏஏ போராட்டம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது பேட்டியில், ரஜினி குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் பாதிப்பு ஏற்படும் என மக்கள் மத்தியில் தேவையற்ற பீதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அரசியல்வாதிகள் தங்களது சுய லாபத்துக்காக தூண்டிவிடுகின்றனர். அவர்களை மக்கள் நம்ப கூடாது. மாணவர்கள் ஒரு போராட்டத்தில் இறங்குவதற்கு முன்பு யோசித்து முடிவெடுத்து இறங்க வேண்டும்.
பிரச்சனை இல்லை
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் முதல் ஆளாக நான் எதிர்ப்பேன். சிஏஏவின் மூலம் இந்திய இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால், தான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன். தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவை நாட்டிற்கு மிகவும் அவசியம், என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருக்கிறார்.
அடுத்து என்ன சொன்னார்
அதேபோல் இரண்டு நாட்கள் முன் டெல்லி கலவரம் குறித்து பேட்டி அளித்த ரஜினி, டெல்லி கலவரம் உளவுத்துறையின் தோல்வி. உளவுத்துறை தோல்வியென்றால் உள்துறை அமைச்சகத்தின் தோல்வி. வன்முறைச் சம்பவங்களை மத்திய, மாநில அரசுகள் தொடக்கத்திலேயே இதனை களைய வேண்டும். போராட்டங்கள் ஏற்படாமல் முதலிலேயே தடுக்க வேண்டும். போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும். சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்வதை ஒடுக்க வேண்டும், என்றுள்ளார்.
கோபம் வந்தது
ரஜினியின் இந்த தொடர் பேச்சு தமிழகம் முழுக்க இருக்கும் இஸ்லாமியர்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. பாட்ஷா படத்தில் இருந்தே ரஜினிக்கு தீவிர ரசிகராக இருக்கும் இஸ்லாமியர்கள் பலர் ரஜினிக்கு இதனால் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினார்கள். அதோடு, ரஜினி பாஜக பக்கம் சாய்ந்து விட்டார். அவர் பாஜகவவுடன் கூட்டணி வைக்க நிறைய வாய்ப்புள்ளது என்றும் இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தது.
நேரடியாக புகார்
இது தொடர்பாக ரஜினிக்கு நேரிடையாகவே தகவல் சென்றுள்ளது. நீங்கள் பாஜகவை சேர்ந்தவர் என்று வெளிப்படையாக பேச தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் பாஜக வலுவாக இல்லை. நீங்கள் பாஜக சாயலுடன் அரசியலுக்கு வந்தால் வெற்றிபெறுவது கஷ்டம். இருக்கிற ரசிகர்களையும் இழக்க நேரிடும்.இந்த நிலையை இப்போதே மாற்ற வேண்டும் என்று அவருக்கு நெருக்கமான சிலர் நேரடியாக ரஜினியிடம் அறிவுரை வழங்கி இருக்கிறார்கள்.
மாற்ற வேண்டும்
இதனால் ரஜினி தன் மீதான விமர்சனத்தை மாற்ற தீவிரமாக முயன்று வருகிறார். தன் மீது சுமத்தப்பட்டு வரும் விமர்சனங்களை சரி செய்வதற்காக தற்போது வரிசையாக அவர் இஸ்லாமிய தலைவர்களை சந்தித்து வருகிறார். அதன் ஒருபகுதியாக நேற்று முதல் நாள் இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் அபுபக்கர், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார். இதில் அவர் ரஜினியிடம் சிஏஏ குறித்து பேசினார்.
வேறு என்ன
அதேபோல் டெல்லி கலவரத்தில் என்ன நடந்தது என்பது குறித்தும் ரஜினியிடம் அவர் விளக்கி இருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ஹஜ் கமிட்டியின் கருத்துக்களை பகிர்ந்து, ரஜினியிடம் விளக்கி இருக்கிறார்கள். அதேபோல் 40 ஆண்டுகாலமாக தனது ரசிகராக இருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த ஜக்கரியாவை இன்று ரஜினி சந்தித்தார். இஸ்லாமியரான இவருடன் ரஜினி திடீர் சந்திப்பு நடத்தியது, இஸ்லாமியர்கள் மத்தியில் தனது பெயரை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் என்பதற்குத்தான் என்று கூறுகிறார்கள்.
வேறு என்ன
இந்த நிலையில் இன்று ஜமாஅத்துல் உலமா சபை தலைவர்களை இன்று ரஜினி சந்தித்தார். காஜா முயீனுத்தீன் பாகவி, அப்துல் அஜீஸ் பாகவி, இல்யாஸ் ரியாஜி, அன்வர் பாதுஷாஹ், முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி, ஆகிய தலைவர்களை இன்று ரஜினி சந்தித்தார். அதில் சிஏஏ குறித்து ரஜினியிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், நாட்டில் அமைதியை ஏற்படுத்த என்னால் ஆன அனைத்து வகை முயற்சிகளையும் எடுப்பேன். உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று ரஜினி உறுதி அளித்துள்ளார்.
ஏன் இப்படி எல்லாம்
ரஜினி இப்படி திடீர் என்று வரிசையாக இஸ்லாமிய தலைவர்களை சந்திக்க காரணம், தன் மீது சுமத்தப்பட்டு இருக்கும் பாஜக சப்போர்ட் என்ற பிம்பத்தை உடைக்கத்தான் என்கிறார்கள். ரஜினி அரசியலுக்கு வந்தால் பெரும்பாலும் தனியாகத்தான் இருப்பார். அவர் தேர்தலுக்கு பின் வேண்டுமானால் பாஜகவுடன் கூட்டணி வைப்பர். ஆனால் தேர்தலுக்கு முன்பு வரை அவர் பாஜகவுடன் இணைய வாய்ப்பில்லை. அதனால்தான் இப்படி இஸ்லாமிய தலைவர்கள் சந்தித்து வருகிறார் என்று கூறுகிறார்கள்.