எடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அடிச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா?
சென்னை: அரசியலுக்கு வரும் முடிவை நடிகர் ரஜினிகாந்த் கைவிட்டுவிட்டார். இன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அதை உறுதி செய்துள்ளது.
அதே நேரம் ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு பல்வேறு கேள்விகளை மக்களிடம் எழுப்பியுள்ளது.
தனது ரசிகர்களையும், தமிழக மக்களையும் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த்? என்ற கேள்விகளை இவரது ட்விட்டர் பதிவு எழுப்பி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்த கடிதம் பொய் ஆனால் அதிலிருக்கும் தகவல்கள் உண்மை: ரஜினி சொல்ல வருவது என்ன?
அரசியல் அறிவிப்பு
அரசியலுக்கு வருவேன் என்று வெளிப்படையாக ரஜினிகாந்த் கூறாமல் மறைமுகமாக படங்களில் பஞ்ச் டயலாக் வைத்தவரை கூட பிரச்சினை இல்லை. ஆனால் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தனது ரசிகர்கள் முன்னிலையில் அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ரஜினிகாந்த். 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்றார். பிறகு ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, எம்ஜிஆர் ஆட்சி தருவேன் என்றார். இவ்வாறு தொடர்ந்து ரசிகர்களுக்கு ஆசையை அதிகரித்துக் கொண்டே சென்றார்.
உடல்நிலை பற்றிய அறிக்கை
இப்போது என்னடாவென்றால், தனது உடல்நிலை பற்றி சமூக வலைத்தளங்களில் பரவிவரும் அறிக்கை உண்மைதான் என்றும், தனது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர், எனவே கொரோனா நோய்த்தொற்று காலத்தில் அவர் மக்களை சந்தித்து அரசியல் நடத்துவது என்பது ரிஸ்க் என்று மருத்துவர்கள் அறிவுரை செய்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பரவிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரஜினிகாந்தும் அதை ஆமோதிக்கிறார்.
அப்போ தெரியாதா?
இதில் மக்களிடம் எழும் கேள்வி என்னவென்றால், 2017 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் வயது மூத்தவர்தானே. தனது உடல்நிலை பற்றி அவருக்கு நன்கு தெரியுமே. ஆனால் அரசியலுக்கு வருவதாக பகிரங்கமாக அறிவித்தாரே. இப்போது அதே உடல்நிலையை காரணம் காட்டி ஜகா வாங்குவது எதற்காக? ஆரம்பத்திலேயே இப்போது கூறியதைப் போல வெளிப்படையாக தனது உடல்நிலை பற்றி தெரிவித்து அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கூறியிருந்தால் கடந்த மூன்று வருடங்களாக களத்தில் இறங்கி உழைத்த தொண்டர்கள் உழைப்பு வீணாகி இருக்காதே என்கிறார்கள் அவர்கள்.
எடப்பாடியாரும், ஸ்டாலினும்
இன்னொரு கேள்வியும் மக்களால் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பாஜக தலைவர் முருகன், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் என தொடர்ந்து மக்களோடு களத்தில் நின்று கொண்டிருக்கக் கூடிய அரசியல்வாதிகள் யாரும் 20 அல்லது 30 வயதுக்காரர்கள் கிடையாது. அனைவரும் வயது மூத்தவர்கள்தான். இதில் பலருக்கும், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இருக்கின்றன. ஆனால், அவர்கள் கொரோனாவுக்கு பயந்து மக்களை சந்திக்காமல் இல்லை. ரஜினிகாந்த் மட்டும் கொரோனாவுக்கு பயந்து களத்துக்கு வருவது பற்றி யோசிப்பது எந்த வகையில் நியாயம். மக்களுக்காகத் துணிந்து வருபவர்தானே ஒரு தலைவராக இருக்க முடியும். தலைவரை பற்றி மக்கள் பயந்து கொண்டே இருக்க முடியுமா என்ற கேள்வியை அவர்கள் முன்வைக்கிறார்கள்.
பருத்தி மூட்டை குடோனில் இருந்திருக்கலாம்
திரைப்படங்களில் அரசியலுக்கு வருவது போல மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி ரசிகர்களை தூண்டாமல் இருந்திருக்கலாம். அதுதான் வணிகம் என்று வைத்துக்கொண்டாலும், அரசியலுக்கு வருவேன் என்று தனது உடல்நிலை பற்றி யோசிக்காமல் அறிவித்து இருக்க வேண்டியதில்லை. அதையும் அறிவித்துவிட்டு, கடைசி நேரத்தில் இப்படி யூ டர்ன் போட்டு செல்வது அவரது ரசிகர்களை எந்த அளவுக்கு மனதளவில் பாதிப்பை உருவாக்கும் என்பதை ரஜினிகாந்த் உணர்ந்துள்ளாரா? இதற்கு பருத்தி மூட்டைகள் குடோனிலேயே, இருந்திருக்கலாமே, என்றெல்லாம் சரமாரியாக கேள்வி எழுப்புகிறார்கள் மக்கள். என்ன பதில் சொல்லப்போகிறார் ரஜினிகாந்த் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.