போட்ட கோலத்தையே மீண்டும் போடும் ரஜினி.. பின்னாடியே வந்து தாங்கி பிடிக்கும் பாஜக.. புரியாத புதிர்!
தர்பார் பட ரிலீஸ் என்பதால் ரஜினி இவ்வாறு கருத்து கூறியதாக தெரிகிறது
Recommended Video
சென்னை: இது ஆன்மீக அரசியலா, வர்த்தக அரசியலா என்று தெரியாமல் விழித்து கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள்! ரஜினி அரசியல் பேசுகிறார் என்றால் அவரது படம் ரிலீஸ் ஆக போகிறது என்று அர்த்தமாகி விட்டது!
ஆன்மீக அரசியலை முன்னெடுக்கப் போவதாக ரஜினி அறிவித்து வருடங்கள் கடக்கிறது.. இடையிடையே வந்து, உசுப்பேத்தி விட்டு மட்டும் போவதாக ரசிகர்கள் சோர்வடைந்து விட்டதாக பல பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன. சிறிது காலம் கழித்து, சட்டமன்றம்தான் இலக்கு என்றவர் கப்சிப் ஆகி போனார்.
இப்போது தர்பார் படம் ரிலீஸ் ஆக உள்ளது. திரும்பவும் ரஜினியின் அரசியல் வருகை குறித்த பேச்சு அடிபட துவங்கி உள்ளது. இந்த நிலையில் "இந்தி திணிப்பு கூடவே கூடாது, ஏற்று கொள்ளவே முடியாது" என்று பாஜகவுக்கு எதிரான கருத்தை சொல்லி உள்ளார் ரஜினி! (ஆனால் கூடவே பொதுவான மொழி இருந்தா வளர்ச்சிக்கு உதவும் என்று அமித்ஷா மாதிரியேவும் பேசியுள்ளார் என்பதை மறக்கக் கூடாது)
தமிழகத்தில் இந்தி மட்டுல்ல.. எதையும் திணிக்க முடியாது.. வாய் திறந்தார் ரஜினிகாந்த்
சிறுபான்மையினர்
பாஜக ஆதரவாளனாக தொடர்பு படுத்தி வெளியாகும் செய்திகளால் வேதனை அடைந்திருப்பதாகவும், இது தொடர்பாக மன்ற நிர்வாகிகளிடம் சொல்லி ரஜினி வருத்தப்பட்டதாகவும் இன்று காலையில்தான் செய்திகள் கசிந்தன. அது மட்டுமில்லை.. பாஜகவின் ஆதரவாளராக தன்னை சித்தரிப்பதும், சிறுபான்மையினரிடம் இருந்து தன்னை தள்ளி வைக்க முயற்சி நடைபெறுவதும் குறித்து கேட்டறிந்து ரஜினி வருத்தம் தெரிவித்தாகவும் செய்திகள் பரபரத்தன.
காஷ்மீர்
உண்மையிலேயே சிறுபான்மையினரிடம் இருந்து தன்னை தள்ளி வைக்க முயற்சி நடைபெறுவதும் குறித்து ரஜினி வருத்தப்பட்டார் என்றால், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு கையாண்ட உத்திகளுக்கு ‘ஹேட்ஸ்ஆப்' என்று ஏன் சொன்னார் என தெரியவில்லை. பொளேர்னு ஒரு கருத்தைத்தானே அவர் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை சொல்லவில்லை.
நதிநீர் இணைப்பு
இப்படித்தான் 'தர்பார்' போஸ்டர் வெளியான தினத்தில், ‘நதிநீர் இணைப்பை தேர்தல் அறிக்கையில் சொன்னது சூப்பர். பாஜகவுக்கு எனது பாராட்டுகள்' என்றார். ஏன் இப்படி சொன்னார்.. என்று அதுவும் இதுவரை புரியவில்லை, தெரியவில்லை..
செல்லூர் ராஜு
"ரஜினி ஒரு வியாபாரி அவர் இன்றைக்கு ஒன்று பேசுவார் நாளைக்கு ஒன்று பேசுவார்" என்று அமைச்சர் செல்லூர் ராஜு ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அவர் சொல்வது உண்மைதானோ என்றுதான் மக்களுக்கு நினைக்கத் தோன்றுகிறது. அப்படி நினைப்பதற்கு நிறைய ஸ்பேஸ் கொடுக்கிறார் ரஜினியும்.
எதேச்சையா
அதேபோல, "இனி அடுத்த பட வெளியீட்டின் போதுதான் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பக்கம் வருவார்" என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் தெரிவித்திருந்தார். அதற்கேற்றபடியே, தர்பார் பட ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், ரஜினியின் இன்றைய பேச்சு அமைந்துள்ளது. இது எதேச்சையா அல்லது இப்படித்தான் எப்பவுமேவா என்று தெரியவில்லை.
கடந்த கால பாடம்
இன்னமும் போட்ட கோலத்தையே திரும்ப திரும்ப ரஜினி வாசலில் போட்டு கொண்டிருப்பதும், தமிழக நடிகர்களை நம்பி பாஜக இல்லை என்று ஒரு அறிக்கை வருவதும் வர்த்தக அரசியலின் வெளிப்பாடாகவே உள்ளது. இதுதான் கடந்த கால ரஜினியின் அரசியல் நமக்கு சொன்ன பாடம்!