அதிமுக, திமுகவை வீழ்த்துவது- முடியவில்லை எனில் அரசியலுக்கு முழுக்கு- இதுதான் ரஜினியின் அறிவிப்பு
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தமது அரசியல் வருகை என்பதே 2021 சட்டசபை தேர்தலில் 54 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியை வீழ்த்துவது; அப்படி செய்ய முடியாமல் போனால் அரசியலில் இருந்து ஒதுங்குவது என்கிற ஒரே ஒரு நிலைப்பாட்டுக்குத்தான் என அறிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
Recommended Video
சென்னையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து தமது அரசியல் வருகையின் நோக்கம், செயல் திட்டங்கள் ஆகியவற்றை வெளியிட்டார். ரஜினிகாந்த் பேட்டியானது மேலோட்டமாக மாற்று அரசியல்; புதிய அரசியல் சிந்தனை என்பதாக வெளிப்படுத்தியிருக்கலாம்.
ஆனால் ரஜினிகாந்தின் முழுமையான நோக்கமே 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக எனும் இரு திராவிட கட்சிகளின் ஆட்சியை வீழ்த்தி 54 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்பதுதான். இதனை அடிப்படையாக வைத்தே தமது செயல் திட்டங்களை வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.
நான் ஒன்னும் 25 வருஷமா நான் அரசியலுக்கு வருவேன்னு சொல்லலிங்க.. ரஜினிகாந்த் தடாலடி
சாதித்த திராவிட கட்சிகள்
திராவிட கட்சிகளை வீழ்த்துவதற்காகவே கட்சி தலைமை வேறு - ஆட்சித் தலைமை வேறு என்கிற புதிய முழக்கத்தை தமிழகத்தில் முன்வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மாநில கட்சிகளைத் தவிர தேசிய கட்சிகள் தலையெடுக்க முடியாது என்கிற நிலைமை முதன் முதலில் உருவாக்கப்பட்டது. இதை சாதித்தது திராவிட கட்சிகள்தான்.
திராவிட பாரம்பரியம் எது?
ஏனெனில் திராவிட கட்சிகள் என்பது இந்த மண்ணின் மைந்தர்களின் கட்சி. மண்ணின் மைந்தர்களுக்கு வாழ்வுரிமையை அரசியல் உரிமையை பெற்றுக் கொடுத்த கட்சி. சக மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்க வேண்டும் என்ற முழக்கத்துடன் ஜாதியின் பெயரால் அடிமைகளாக நடத்துகிற அநீதிகளுக்கு பாடைகட்டிய திராவிடர் பேரியக்கத்தின் வழிவந்த கட்சிகள் அதிமுகவும் திமுகவும்.
சமூகத்தை புரட்டி போட்ட கட்சிகள்
இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு கும்பிடுகிறேன் சாமி என்று சுயமரியாதை இழந்த மக்களிடம், தோலில் துண்டைப் போட்டுக் கொண்டு வணக்கம் என நெஞ்சை நிமிர்த்தி இருகரம் கூப்பி பொதுமேடைகளில் பேச வைத்த இயக்கம் திராவிடர் இயக்கம். இந்த பேரியக்கத்தின் அடிப்படை அம்சங்கள், அரசியல் கட்சிகளான திமுக- அதிமுகவிடம் நீர்த்து போயிருக்கலாம். ஆனால் அதிகாரத்துக்கு வந்த நாள் முதல் இந்த மண்ணையும் மக்களின் முன்னேற்றத்தையும் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் வெகுவாக முன்னேற்றிக் காட்டி ஏற்றத்தை உருவாக்கிய கட்சிகள் திராவிட கட்சிகள்.
அரசியலைவிட்டு ஓடுவேன்
இந்த திராவிட கட்சிகளை எளிதாக வீழ்த்திவிட முடியும் என்று பகல் கனவு கண்டு கொண்டுதான் ரஜினிகாந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 2021 தேர்தலில் தமது கொள்கைகள் எடுபடாமல் போனால் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு அதே கொள்கைகளை பேசப் போவதும் இல்லை- இன்றே ஏற்காத மக்கள்2026-ல் ஏற்கவா போகிறார்கள்? என்ற கேள்வியின் மூலம் 2021 தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றுவது- திராவிட கட்சிகளை வீழ்த்துவது- இல்லையெனில் அரசியலைவிட்டே ஓடிவிடுவது என்ற முடிவோடுதான் ரஜினி களத்துக்கு வந்திருக்கிறார் என்பதையே அவர் இன்று அறிவித்திருக்கிறார்.