என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி
சென்னை: தனது பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி ரசிகர்கள் சமூக நல தொண்டுகளில் ஈடுபட்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். டுவிட்டரில் ரஜினிக்கு வாழ்த்து கூறி பதிவிடப்பட்ட பதிவுகள், தேசிய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் டிரெண்ட் ஆனது.
இந்த நிலையில், ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் இன்று இரவு இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதை பாருங்கள்:
என் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடி, என்னை வாழ்த்திய என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும், என்னை நெஞ்சார வாழ்த்திய தமிழ் மக்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும், மற்றும் பல துறையிலிருக்கும் அன்பர்களுக்கும், பத்திரிக்கை, ஊடக மற்றும் தொலைக்காட்சியினருககும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) December 12, 2019
முன்னதாக, ஆடம்பரக் கொண்டாட்டம் வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டதால், அவர் வேண்டுகோளின் படி, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், ரத்த தானம், அன்னதானம் என கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
ரஜினியின் பிறந்த நாளை, தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் உள்ள அவரது ரசிகர்களும் கொண்டாடினர். துபாயில் உள்ள 'ரஜினிகாந்த் 24/7' ஹோட்டலில், ரஜினியின் 70 பிறந்த நாளை குறிக்கும் விதமாக, 70 கேக்குகள் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.