நடுத்தெருவுக்கு முதல் முறையாக குட்பை.. நட்சத்திர விடுதியில் நாளை ரஜினிகாந்த் பிரஸ் மீட்
சென்னை: அரசியல் கட்சியை தொடங்குவது தொடர்பான முக்கிய முடிவை வெளியிடுவதற்காக நாளை ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
அரசியல் கட்சியை தொடங்குவது குறித்து ரஜினிகாந்த் எப்போது அறிவிப்பு வெளியிடுவார் என 2 ஆண்டுகாலமாக எதிர்பார்ப்பு இருந்தது. இது தொடர்பாக தமது மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களளை ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்பு சந்தித்தார்.
அப்போது ஆட்சிக்கு ஒருவர்; கட்சிக்கு ஒருவர் என்கிற புதிய வியூகத்தை ரஜினிகாந்த் முன்வைத்தார். ஆனால் மன்ற மாவட்ட செயலாளர்கள் இதை ஏற்கவில்லை. இது வெளிப்படையாக கூறாமல் சிறு ஏமாற்றம் இருக்கிறது; பின்னர் விளக்கமாக தெரிவிக்கிறேன் என ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
மீண்டும் மா.செ.க்கள் கூட்டம்
இந்த நிலையில் நாளை சென்னையில் மீண்டும் மாவட்ட செயலாளர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார். முன்னதாக ரஜினிகாந்த் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்திப்பார் என அதிகாரப்பூர்வமாக அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. உரிய அடையாள அட்டையுடன் செய்தியாளர்கள் வர வேண்டும் என்கிற குறிப்பும் அனுப்பப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய சந்திப்புகள்
நடிகர் ரஜினிகாந்த் இதுவரையில் செய்தியாளர்களை அதிகமாக சந்தித்தது போயஸ் கார்டனில் நடுத்தெருவில்தான். அடுத்ததாக விமான நிலைய வாசல்களில்தான். அவர் நினைத்ததை மட்டும் சொல்லிவிட்டு விறுவிறுவென வீட்டுக்குள் நுழைந்துவிடுவார்; அல்லது காருக்குள் ஏறிவிடுவார்.. செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமாக பதில் சொன்னது இல்லை. இதனால் ரஜினிகாந்தின் ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பும் சர்ச்சைக்குரியதானது.
விளக்கத்துக்காகவும் ஒரு பிரஸ் மீட்
ஒருசில நேரங்களில் ஒரு செய்தியாளர் சந்திப்புக்கான விளக்கமாக இன்னொரு செய்தியாளர் சந்திப்பையும் ரஜினிகாந்த் நடத்தியும் காட்டி புதுமை படைத்திருக்கிறார். இந்த நிலையில் நடுத்தெருவில் செய்தியாளர்களை சந்திக்கும் வழக்கத்துக்கு குட்பை சொல்லிவிட்டு நாளை நட்சத்திரவிடுதியில் சந்திக்க உள்ளார் ரஜினிகாந்த்.
நட்சத்திர விடுதியில் பிரஸ் மீட்
தம்முடைய அரசியல் நுழைவு அறிவிப்புக்குப் பின்னர் எத்தனையோ செய்தியாளர்கள் சந்திப்பை ரஜினிகாந்த் நடத்தியிருக்கிறார். நாளைதான் அதிகாரப்பூர்வமாக அவரே அதுவும் நட்சத்திர விடுதியில் சந்திக்க செய்தியாளர்களை அழைத்திருக்கிறார். அதனால் அத்தனை கேள்விகளுக்கும் நிறுத்தி நிதானமாக விளக்கமாக ரஜினிகாந்த் பதிலளிப்பார் என்கிற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.