30 ஆண்டுகால அரசியல் நாடகத்துக்கான க்ளைமாக்ஸ் முடிவை நாளையாவது வெளியிடுவாரா ரஜினிகாந்த்?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தமது கட்சி தொடர்பான அறிவிப்பை நாளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 30 ஆண்டுகாலமாக அரசியலுக்கு வருகிறேன் என தமிழகத்தை பேச வைத்துள்ள பஞ்சாயத்துக்கு நாளையாவது ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்துவிடுவாரா என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Recommended Video
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக கூறி வந்தார். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்தார்.
ஆனால் ஆண்டுகள் உருண்டோடியும் ரஜினிகாந்த் கட்சியையே தொடங்கவில்லை. இது ரஜினி மீதான விமர்சனங்களை அறிவித்தது. மேலும் ஒவ்வொரு டிசம்பர் மாதமும் ஏப்ரல் மாதமும் கட்சியை ரஜினி அறிவிப்பார் என்கிற தகவல்களும் ரெக்கை கட்டி பறக்கும்.
மா.செ.க்கள் ஆலோசனை
எதுவும் நடந்தபாடில்லை என்பதால் ரஜினி அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்கிற கேள்வியும் எழுவதும் உண்டு. இந்நிலையில் அண்மையில் தமது மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். இச்சந்திப்பை பாதியில் முடித்து கொண்ட ரஜினிகாந்த், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது; அதை பின்னர் தெரிவிக்கிறேன் என்றார்.
விவாதமான ஏமாற்றம்
இந்த ஏமாற்றம்? எது என்பது குறித்து இன்னமும் விவாதம் நடைபெற்று வருகிறது. ஒருவழியாக ஆட்சிக்கு ஒருவர்; கட்சிக்கு ஒருவர் என ரஜினிகாந்த் எடுத்த நிலைப்பாட்டை மக்கள் மன்ற நிர்வாகிகள் ஏற்க மறுத்ததுதான் காரணம் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரஜினியின் ஆட்சியில் யார் முதல்வர் என்கிற விவாதம் சூடுபறக்க நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நாளை முக்கிய அறிவிப்பாம்
இந்நிலையில் மீண்டும் மாவட்ட செயலாளர்களை ரஜினிகாந்த் சென்னையில் நாளை சந்தித்து பேசுகிறார். இச்சந்திப்பைத் தொடர்ந்து தமது கட்சி தொடர்பான முக்கியமான அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடுவார் என கூறப்படுகிறது.
நாளையாவது வெளியிடுவாரா?
30 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினிகாந்தும் அரசியலும் என்கிற நாடகம் தமிழகத்தில் நடந்து கொண்டே இருந்தது. இப்போதாவது இந்த மிக நீண்ட நாடகத்துக்கு ஒரு முடிவுரை எழுதப் போகிறாரே ரஜினிகாந்த் என்கிற நிம்மதி இப்போது இருக்கிறது. நாளைக்கும் வேதாளம் முருங்கை மரம் ஏறினால் ஆச்சரியப்படுவதற்கும் இல்லை.