2021 "தேர்தல் போர்"... வடிவேலு ஜோக் போலாகி விடாமல்.. காப்பாத்த வேண்டியது ரஜினி கையில்தான் இருக்கு!
2021 சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் அதற்குள் கட்சி தொடங்கி தேர்தலில் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை: நான் எப்போ வருவேன், எப்படி வருவேன் என்று தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பா வருவேன் என்று ரஜினி வசனம் பேசி 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அரசியலில் குதிக்கப் போகிறேன் ஆன்மீக அரசியல் என்று ரஜினி சொல்லியும் சில வருடங்கள் ஓடி விட்டன. ரஜினியின் அரசியல் பயணம் இதோ அதோ என்று இழுத்துக்கொண்டு போகிறது. 2021 சட்டசபை தேர்தலும் வரப்போகிறது அதற்குள் ரஜினி கட்சி ஆரம்பித்து விடுவாரா? சட்டசபை தேர்தலில் களமிறங்குவாரா என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
1995ஆம் ஆண்டு பாட்சா படம் வெற்றிவிழாவின் போது ஜெயலலிதா இருந்த மேடையில் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசினார் ரஜினி. ரஜினியின் மீது அப்போதே அரசியல் சாயம் பூசப்பட்டது. பாட்சாவை தயாரித்த ஆர்.எம்.வீரப்பன் பதவியிழந்தார். தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த தான் நடித்த பல படங்களில் அரசியல் வசனம் பேசி விட்டார்.
1996 சட்டசபைத் தேர்தலில் திமுக - தமாக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தார். ஜெயலலிதாவிற்கு எதிராக வீசிய அலை காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக ரஜினி வாய்ஸ் செல்லுபடியானது 1996ல் திமுக ஆட்சியைக் கைப்பற்றியது.
அதன்பிறகு நடிகர் ரஜினிகாந்த் நேரடி அரசியலில் ஈடுபடவில்லை. ஆனாலும் அவரது ரசிகர்கள் ரஜினிகாந்த் நேரடி அரசியலுக்கு வரவேண்டும் என்றும், தமிழகத்தை ஆள வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக தொடர் கோரிக்கைகளை வைத்துவருகின்றனர்.
ரஜினிகாந்தும் அதற்கு ஏற்றார் போல அவர் நடிக்கும் திரைப்படங்களில் மட்டும் அவ்வப்போது அரசியல் வருகை குறித்து மறைமுகமாக தெரிவித்து வந்தார்.
அதிமுக, திமுக என கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி ஆண்டு கொண்டு இருக்கின்றன. "வா தலைவா" என்று ரஜினியை அவரது ரசிகர்கள் அழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டில் ஜெயலலிதா மறைவும், 2017ஆம் ஆண்டில் கருணாநிதியின் மறைவும் அதிமுக, திமுக தலைமையில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது. இது தமிழக அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார் ரஜினிகாந்த்
ரஜினியின் அரசியல்
ரஜினிகாந்த் கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்து பல கட்டமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். அப்போது பேசிய அவர் போர் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்றார். பின்னர் போர் என்றாலே அரசியல்தானா என்று கேள்வி எழுப்பினார். அரசியலில் ஜெயிக்க வீரம் மட்டுமல்ல வியூகமும் முக்கியம் என்று கூறினார்.
234 தொகுதிகளிலும் போட்டி
2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி நான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் எனவும் தெரிவித்திருந்தார். தனது அரசியல் ஆன்மீக அரசியல் என்றும் கூறினார். 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லையா என்ற கேட்ட போது எனது இலக்கு சட்டமன்ற தேர்தலே என்று அப்போதே தெரிவித்தார்.
2021 ல் அற்புதம்
அவ்வப்போது ரசிகர்களை சந்தித்தாலும் ட்விட்டரில் அரசியலில் நடத்தினாலும் கடந்த மார்ச் மாதம் ரஜினி பேசியதுதான் யாருமே எதிர்பார்க்காதது. அசுர பலம் வாய்ந்த அதிமுக மற்றும் திமுக என்ற இரண்டு பெரும் ஜாம்பவான்களை எதிர்த்து போராட வேண்டியது உள்ளது எனவும், கருணாநிதியும், ஜெயலலிதாவும் மிகப்பெரிய ஆளுமைகள் என்றும் அவர்கள் இல்லாதது தற்போது வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ரஜினிகாந்த் கூறினார். மேலும் 2021ம் ஆண்டில் நடைபெற இருக்கும் தேர்தலில் தமிழக மக்கள் அற்புதத்தை நிகழ்த்த காத்துக்கொண்டிருக்கின்றனர் என்றும் அப்போது தெரிவித்தார் ரஜினிகாந்த்
ஆட்சி மாற்றம் நடக்குமா
அரசியல் மாற்றம், மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி மக்களிடம் தெரிந்தால் தான், நான் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்தார். அரசியல் மாற்றமும், ஆட்சி மாற்றமும் இப்பொழுது ஏற்படவில்லை என்றால் எப்போதும் நடக்காது என்று கூறினார்.
தனக்கு முதல்வர் பதவியில் விரும்பம் இல்லை என்றும், தன்னை வருங்கால முதல்வர் என்று கூப்பிட வேண்டாம் என்று கூறிய அவர், ஆட்சி அதிகாரத்தை தான் ஏற்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார். அவ்வப்போது தனக்கு வயதாகி விட்டதாகவும் வெளிப்படையாக கூறுகிறார் ரஜினிகாந்த்.
வந்தாலும் களமிறங்குவாரா-
ரஜினிகாந்த் இப்போதே கட்சி தொடங்கியிருப்பார் ஆனால் கொரோனா பிரச்சினை இருப்பதால் நவம்பர் மாதம் கட்சி தொடங்குவது பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறியிருக்கிறார் அவரது ஆதரவாளர் கராத்தே தியாகராஜன். நவம்பரில் கட்சி தொடங்கி, தொண்டர்களின் பலம் சேர்த்து எப்போது சட்டசபை தேர்தலுக்கு தயாராவார் ரஜினி என்பதே பலரின் கேள்வி.
வரும்போது பார்த்துக்கொள்வோம்
234 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற இது ஒன்றும் சினிமா கிடையாது. எம்ஜிஆர் போல ரஜினிக்கு அந்த அளவிற்கு தொண்டர் படையும் கிடையாது என்பதே பல அரசியல் தலைவர்களின் கருத்து. அவர் தனிக்கட்சி தொடங்குவாரா? அல்லது தேசிய கட்சிக்கு தலைமை ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. எது எப்படியோ ரஜினி அரசியலுக்கு வருகிறாரா என்பது உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது, அவருக்கும் தெரியாது. அவர் வரும்போது பார்த்துக்கொள்வோம் என்று வடிவேலு சொன்ன காமெடி நிஜமாகிவிடாமல் இருப்பது ரஜினிகாந்தின் கைகளில்தான் இருக்கிறது.