நாளையாவது க்ளைமாக்ஸ் தெரியுமா? சென்னையில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நாளை தமது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடத்தும் ஆலோசனையின் முடிவிலாவது அரசியல் வருகை தொடர்பான ஏதேனும் ஒரு அறிவிப்பை வெளியிடுவாரா? என்கிற எதிர்பார்ப்பு தொடருகிறது.
கொரோனா, உடல்நிலையை முன்வைத்து நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என சூசகமாக தெரிவித்திருந்தார். ரஜினிகாந்த் பிடிகொடுக்காமல் இருந்ததால் தமிழகம் வந்த பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா அவரை சந்திக்கவும் இல்லை.
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்..யோகி ஆதித்யநாத்தை தொடர்ந்து களத்தில் அமித்ஷா- அனல் பறக்கிறது!
அரசியலுக்கு முழுக்கு?
அத்துடன் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டும் விட்டது. அதிமுவிடம் பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அரசியலுக்கு தாம் வரப்போவதில்லை என ரஜினிகாந்த் வெளிப்படையாக அறிவிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகின.
நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை
இப்படியான ஒரு அறிவிப்பு வருவதற்கு முன்னதாக திடீரென சென்னையில் மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்துக்குப் பின்னர் ரஜினிகாந்த் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் தொடர்பான விவாதங்கள் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜகா வாங்கிய ரஜினி
ஏற்கனவே மன்ற நிர்வாகிகளிடம் பேசிய ரஜினிகாந்த், கட்சி வேறு - ஆட்சி வேறு; நான் முதல்வர் பதவியில் உட்காரமாட்டேன் என கூறியிருந்தார். அப்போதே ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்கிற பேச்சுகள் எழுந்தன. இந்த நிலையில் மீண்டும் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்கிறார்.
எகிறும் எதிர்பார்ப்பு
தமிழருவி மணியன் போன்றவர்கள் எதிர்பார்ப்பது போல திடீரென தமது முடிவை ரஜினிகாந்த் மாற்றி கொள்வாரா? ரஜினி ரசிகர்கள் எதிர்பார்ப்பதைப் போல அரசியலுக்கு வந்து அற்புதத்தை நிகழ்த்துவேன் என இன்னொரு பல்டி அடிப்பாரா? என்பதும் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.