அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று மாலை அல்லது நாளை ரஜினிகாந்த் அறிவிப்பார்- மக்கள் மன்ற நிர்வாகி
சென்னை: அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று மாலை அல்லது நாளை ரஜினிகாந்த் ஊடகங்கள் மூலமாக அறிவிப்பார் என்று அவருடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலையில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணிநேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், மக்கள் மன்ற நிர்வாகிகள் பலரது செயல்பாடுகள் தொடர்பாக ரஜினி அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் அரசியல் தொடர்பாக தாம் முடிவு எடுத்து அறிவிக்கும் வரை பொறுத்திருங்கள் என்றும் ரஜினிகாந்த் கூறியதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
அரசியலுக்குப் போன சினிமாக்காரர்கள் வரிசையில்.. ரஜினிகாந்த் இணைவாரா.. எஸ்கேப் ஆவாரா?
ரஜினிகாந்துடனான ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் மன்ற நிர்வாகி, எங்களுடைய கருத்துகள் அனைத்தையும் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டார். இப்போதைய சூழ்நிலையில் அரசியலுக்கு ரஜினிகாந்த் வரவேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம்.
ரஜினிகாந்த் தமது அரசியல் நிலைப்பாடு தொடர்பாக இன்று மாலை அல்லது நாளை செய்தியாளர்கள் மூலமாக அறிவிப்பார். அந்த முடிவு நல்ல முடிவாகவே இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் . ரஜினிகாந்த் எந்த முடிவு எடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்றார்.