பேரனின் ஆசைக்காக ஆழ்வார்பேட்டைக்கு ஆட்டோவில் சென்ற பாட்ஷா!
சென்னை: பேரனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக சொகுசு காரை விட்டுவிட்டு போயஸ் தோட்டத்திலிருந்து ஆழ்வார்பேட்டை வரை ஆட்டோவில் பயணம் செய்தார் ரஜினிகாந்த்.
எளிமையான பிரபலம் என்றால் உடனே நினைவுக்கு வருவது ரஜினிகாந்த்தான். அவர் எந்த ஊர் சென்றாலும் தான் ஒரு பெரிய நடிகன் என்று காட்டிக் கொண்டே இல்லை.
இமயமலை உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு பயணம் செய்தாலும் சிறிய கடைகளில் உணவு உண்பது, கட்டாந்தரையில் துண்டு விரித்து படுப்பது என பலருக்கே ஆச்சரியமூட்டும் செயல்களில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
போயஸ் தோட்டம்
இந்நிலையில் சௌந்தர்யாவின் மகன் வேத்துடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனுஷ் வீட்டுக்கு ரஜினி ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். அப்போது வேத் "தாத்தா எனக்கு ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டும்" என்றான். பேரனின் விருப்பத்தை நிறைவேற்ற போயஸ் தோட்டம் அருகே ஸ்டாண்டில் இருந்த ஆட்டோவை வரவழைத்தார்.
ரஜினி காரில் புறப்பட்டார்
பின்னர் பேரன் மற்றும் மகளுடன் தனுஷ் வீட்டுக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் இருந்த ரஜினி காரில் புறப்பட்டு மீண்டும் போயஸ் தோட்டத்துக்கே சென்றுவிட்டார்.
ஆசை பெரிது
காரில் சென்றாலே ரஜினியை பார்க்க கூட்டம் கூடிவிடும். இதில் ரஜினி ஆட்டோவில் பயணம் செய்தது தெரிந்தால் அப்பப்பா... எனினும் தனது பேரனின் ஆசையை நிறைவேற்ற எத்தகைய ரிஸ்க்கையும் ரஜினி எடுப்பார் என்பதையே காட்டுகிறது இந்த ஆட்டோ பயணம். விலை மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காருக்கு முன்னால் பேரனின் ஆசைதான் பெரிது என்று நினைத்தார்.
போக்குவரத்து போலீஸார்
இதுபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈசிஆர் சாலையில் நடந்த ஒரு படப்பிடிப்புக்கோ அல்லது கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கோ சென்ற போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்த ரஜினி தனது டிரைவர் மூலம் அங்கிருந்த போக்குவரத்து போலீஸாரை அழைத்தார்.
ஹெல்மெட் அணிந்து
பின்னர் தான் அவசரமாக குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல வேண்டும் என்பதால் தன்னை இரு சக்கர வாகனத்தில் அழைத்து செல்லும்படி கேட்டுக் கொண்டார். அதுபோல் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் ஓய்யாரமாக பறந்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.