தாய்மார்களின் மனவேதனையை எதிரொலித்த ரஜினி... எச்சரிக்கையும், அறிவுரையும் கலந்த ட்வீட்
சென்னை: டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள கருத்து தமிழக தாய்மார்களின் மனசாட்சியாகவே கருதப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பெண்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் குதித்தனர்.
இந்தக் காட்சிகளை எல்லாம் தொலைக்காட்சி மூலம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், அரசின் முடிவுக்கு எதிராக கடுமையாக சீற்றம் கொண்டிருக்கிறார். அதன் வெளிப்பாடாகவே இன்றைய தினம் அவரது ட்வீட்டர் பதிவு அமைந்துள்ளது.
டாஸ்மாக்கை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துட வேண்டியதுதான்.. ரஜினிகாந்த்
பெண்கள் போர்க்குரல்
ஊரடங்கு காரணமாக வேலையும், வருமானமும் இல்லாமல் ஏழை எளியோர் தவித்து வரும் சூழலில் டாஸ்மாக் கடைகள் திறப்பு குடும்பத் தலைவிகளை கொந்தளிக்க வைத்தது. இதனால் மதுக்கடைகளை மூடக்கோரி ஆங்காங்கு போராட்டம் நடத்தியதுடன் மதுரை உள்ளிட்ட சில இடங்களில் அவர்களே டாஸ்மாக்கை இழுத்து மூடினர். மதுவால் குடும்பம் சீரழிவதாக பெண்கள் அழுகையுடன் அளித்த பேட்டிகளை செய்தித் தொலைக்காட்சிகளில் பார்த்து நடிகர் ரஜினிகாந்த் மிகுந்த வேதனை கொண்டுள்ளார்.
எதிரொலி
தாய்மார்களின் தவிப்பை, அவர்கள் அரசுக்கு கூற விரும்பியதை நடிகர் ரஜினிகாந்த் தனது ட்வீட்டர் மூலம் பதிவு வெளியிட்டு சுட்டிக்காட்டிவிட்டார். டாஸ்மாக் கடைகளை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற கனவை மறந்துவிடுங்கள் என்ற ரஜினியின் பதிவை எளிதாக கடந்துவிட முடியாது. இதில் ஆயிரம் அர்த்தங்கள் உள்பொதித்து இருக்கின்றன. மாநில அரசுக்கு மட்டும் கூறினாரா இல்லை மத்திய அரசுக்கும் சேர்த்து சொன்னாரா என விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன.
அறிவுரை
அரசின் கஜானாவை நிரப்ப பல நல்ல வழிகள் இருப்பதாக ரஜினி கூறிய அறிவுரை தமிழக அரசுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மாநில அரசுகளுக்கும் பொருந்தும் வகையில் உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதை நடிகர் ரஜினிகாந்த் சூசகமாக சுட்டிக்காட்டியுள்ளார். மதுவிலக்கு கொள்கையை நேரடியாக இல்லாவிட்டாலும் பூடகமாக ரஜினி வெளிப்படுத்தியுள்ளார்.
கொண்டாட்டம்
நடிகர் ரஜினிகாந்தின் ட்வீட்டர் பதிவுக்கு அவரது ரசிகர்கள், குடும்பத்தலைவிகள், மதுவிலக்கு கொள்கை உடைய அரசியல் கட்சிகள், என பல தரப்பில் இருந்து பாராட்டுக்களும், நன்றியும் குவிகின்றன. ரஜினியை பொறுத்தவரை ஒரு கருத்தை கூறும் முன் ஆயிரம் முறை சிந்தித்து தான் அதை வெளியிடுவார். அந்த வகையில் மதுவுக்கு எதிரான நிலைப்பாட்டி அவர் தொடர்ந்து உறுதியாக இருப்பார் எனத் தெரிகிறது.