மாற்றி மாற்றி விமர்சனம்.. கடுமையாகும் வார்த்தை போர்.. தொடங்கியது ரஜினி vs அதிமுக!
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அதிமுக கட்சியினருக்கு இடையில் தற்போது கடுமையான வார்த்தை போர் நடந்து வருகிறது.
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அதிமுக கட்சியினருக்கு இடையில் தற்போது கடுமையான வார்த்தை போர் நடந்து வருகிறது. இரண்டு தரப்பினரும் மாற்றி மாற்றி விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது. இதற்கு இடையில் ரஜினிகாந்த் பாஜகவிற்கு நெருக்கமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. அதேபோல் அதிமுகவிற்கு தலைவராகிறார் என்றும் கூட செய்திகள் வந்தது.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போதும் கூட ரஜினிகாந்த் அதிமுக அரசுக்கு ஆதரவாகவே குரல் கொடுத்து இருந்தார். ஆனால் தற்போது அதே அதிமுகவிற்கும் நடிகர் ரஜினிகாந்திற்கும் இடையில் கடுமையான வார்த்தை போர் நடந்து வருகிறது.
மோடியை காப்பாற்றியதே பால் தாக்கரேதான்.. மறக்க வேண்டாம்.. சிவசேனா கடுமையான விமர்சனம்!
என்ன சொன்னார்
கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் ஆளுமையான தலைவர்கள் இல்லை. நல்ல தலைவர்களுக்கு இங்கு வெற்றிடம் நிலவி வருகிறது. முறையான வலிமையான தலைவர்களுக்கு வெற்றிடம் நிலவி வருகிறது என்று குறிப்பிட்டார்.
அதிமுக பதிலடி
இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். முதல்வர் பழனிசாமி உட்பட அதிமுக தலைவர்கள் எல்லோரும் இதை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளனர். அரசியல் வெற்றிடத்தை முதல்வர் பழனிசாமி நிரப்பிவிட்டார் என்று அதிமுக தலைவர்கள் வரிசையாக விமர்சனம் செய்தனர்.
மீண்டும் பேசினார்
இந்த நிலையில் நேற்று முதல்நாள் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் திரை பயணத்தை பாராட்டும் வகையில் நடந்த கமல் 60 நிகழ்ச்சியில் ரஜினி பேசினார். அதில், எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். அவரின் ஆட்சி நான்கு, ஐந்து மாதம் கூட தாங்காது என்றார்கள். நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்து விடுமென 99% பேர் சொன்னார்கள்.
என்ன ஒரு அதிசயம்
ஆனால் அதிசயம் நடந்தது. ஆட்சி நீடித்தது. அது மாதிரியான அதிசயம், அற்புதம் நேற்றும் நடந்தது. இன்றும் நடக்கிறது, நாளையும் நடக்கும். தமிழக அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். நாம் அரசியலை கவனமாக பார்க்க வேண்டும், என்று ரஜினி குறிப்பிட்டார்.
கோபம் என்ன
ரஜினியின் இந்த பேச்சு அதிமுகவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ரஜினியின் பேச்சிற்கு முதல் ஆளாக அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். அதில், ரஜினி யாருடன் சேர்ந்து வந்தாலும் அவரை நாங்கள் எதிர்ப்போம்.அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர் ரஜினி; ஆனால், நாங்கள் வாக்காளர்கள், பொதுமக்களை நம்பியிருக்கிறோம். அதிமுக வலிமையாக இருக்கிறது.
பதிலடி
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவும் மறைந்துவிடும் என்று வதந்தி பரப்பினார்கள். ஆனால், அதிமுக ஆட்சி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது என்று ஜெயக்குமார் குறிப்பிட்டார். இதன் பின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் ரஜினிக்கு பதிலடி கொடுத்தார்.
ராஜேந்திர பாலாஜி பேட்டி
ராஜேந்திர பாலாஜி தனது பேட்டியில், பாட்ஷா திரைப்படம் வெளியானபோது கட்சி ஆரம்பித்திருந்தால் ரஜினி ஆட்சியை பிடித்திருப்பார். ஆனால் இப்போது வாய்ப்பு இல்லை. அவர் மிகவும் லேட்டாக வந்துவிட்டார். அவருக்கு வயதாகிவிட்டது. அவரால் பிரச்சாரம் செய்ய முடியுமா என்றே தெரியவில்லை.
ரஜினி கமல்
ரஜினி, கமல், விஜய் ஆகியோர் கூட்டணி அமைத்தால் அதனை எதிர்கொள்ள எங்களுக்கு தெரியும். எங்கள் கட்சி பலம்வாய்ந்த கூட்டணியை அமைக்கும். அரசியலில் என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு
இதெல்லாம் போக நேற்று இரவு அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து நடிகர் ரஜினி கூறிய கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். அவரின் கருத்தை ஏற்க முடியாது. எந்த தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திப்பதற்கு அதிமுக தயாராக உள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.
நமது அம்மா
நடிகர் ரஜினிக்கு அதிமுக கட்சியின் நாளிதழான நமது அம்மா பதிலடி கொடுத்து இருக்கிறது. அதில், தமிழகத்தில் நிறைய ரீல் தலைவர்கள் இருக்கிறார்கள். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வர ரீல் தலைவர்கள் நினைக்கிறார்கள். ரீல் தலைவர்களுக்கு மத்தியில் முதல்வர் பழனிசாமி ரியல் தலைவராக இருக்கிறார்.
நடத்துனர் பணி
ரஜினி நடத்துனராக பணியை தொடங்கினார். அவரும் கூட தான் ஒரு சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் நினைத்திருக்க மாட்டார். காலம் கொடுக்கும் வாய்ப்பை பயன்படுத்தி உழைப்பவர்கள் முன்னேறுவார்கள். அப்படித்தான் முதல்வர் பழனிசாமியும் முன்னேறினார், என்று நமது அம்மா நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
என்ன சண்டை
இதனால் தற்போது நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அதிமுக கட்சியினருக்கு இடையில் கடுமையான சண்டை நிலவி வருகிறது. இவர்களின் கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளிப்பாரா? என்ன மாதிரியான எதிர்வினையாற்றுவார் என்று கேள்வி எழுந்துள்ளது.