2.0 திரைப்பட டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை- ரஜினி வார்னிங்
சென்னை: 2.0 திரைப்படத்தின் டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தனது ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஜினி நடிப்பில் மாறுபட்ட தொழில்நுட்பத்தில் 2.0 திரைப்படம் வரும் 29-ஆம் தேதி திரையிடப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 600 கோடியாகும். முழுக்க முழுக்க 3 டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டது.
அறிவுரை
இந்த படத்தின் ரசிகர் மன்ற காட்சிக்கான டிக்கெட்டுகளை அதிக விலைக்கு வெளியில் விற்பனை செய்யும் ரசிகர் மன்றத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் தெரிவித்துள்ளார்.
பின்பற்ற வேண்டும்
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ரஜினிகாந்த் நடித்து வெளிவரவுள்ள 2.0 திரைப்படத்தின் ரசிகர்மன்ற காட்சி தொடர்பாக கீழ்காணும் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்பட வேண்டும்.
நிர்ணயித்த கட்டணங்கள்
திரையரங்குகளில் ரசிகர் மன்ற காட்சி என்று பெறப்பட்ட டிக்கெட்டுகளை வெளியே விற்பனை செய்யக் கூடாது. ரசிகர்களிடம் இருந்து திரையரங்குகளில் இருக்கைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது.
எச்சரிக்கை
இதை மீறி செயல்படும் மன்ற நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் " என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.