அரசியல் கட்சியை அறிவிப்பாரா ரஜினிகாந்த்... மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ஆலோசனை!
ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திங்கட்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்.
சென்னை: ரஜினிகாந்த் அரசியல் கட்சியை எப்போது தொடங்குவார் என்று அவரது ரசிகர்களும் மன்ற நிர்வாகிகளும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் வரும் 30ஆம் தேதி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசிக்கப் போகிறார் ரஜினிகாந்த். தொலைபேசி மூலம் சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி எனச் சபதம் எடுத்து 3 வருடமாகிவிட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தான் அரசியலுக்கு வரவுள்ளதாக ரசிகர்கள் முன்பு அறிவித்தார் ரஜினிகாந்த். அவரது அறிவிப்புக்கு பிறகு நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், 20 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்து விட்டது.
போர் வரும் போது வரும் போது வருவோம் என்று சொன்னார் ரஜினிகாந்த், அவர் சொன்ன பிறகு பல போர்கள் வந்து விட்டன. அவரைத்தான் ஆளைக்காணோம்.
"பன்ச்" வச்சு பேசிய சரோஜா.. திணறிபோன மக்கள்.. "சொல்லாததையும் செய்வேன்".. அமைச்சரின் திடீர் அதிரடி!
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார், எம்எல்ஏ ஆகிவிடலாம் என்று ரசிகர்கள் கனவு கண்டுகொண்டிருக்கின்றனர். 1996ஆம் ஆண்டு முதலே ரஜினியை அரசியலுக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கின்றனர். ரஜினிதான் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்காமலேயே இருந்தார்.
சந்திப்பு
ஜெயலலிதாவும், கருணாநிதியும் தமிழ்நாட்டு அரசியலில் இருந்தவரை ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவே இல்லை. இருவரும் மரணமடைந்த பின்னர் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறிய ரஜினிகாந்த், 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியலுக்கு வரப்போவதாகவும், ஆன்மீக அரசியல் பயணம் பற்றியும் பேசினார் ரஜினிகாந்த்.
அரசியல் கட்சி எப்போது
ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது பற்றி இதுவரைக்கும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தான் முதல்வர் வேட்பாளர் இல்லை என்று கூறியுள்ள ரஜினிகாந்த், நேர்மையானவர்கள் தனது கட்சியில் இணையலாம் என்று கூறியிருந்தார்.
2021 சட்டசபை தேர்தல்
2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு என்றும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்றும் அறிவித்திருந்தார். ரஜினி விரைவில் கட்சித்தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது.
ரசிகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த்
சமீபத்தில் ரஜினிகாந்த் பெயரில் வெளியான கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. குறித்து தனது உடல்நிலை குறித்து வெளியான தகவல்கள் உண்மை என்று கூறியிருந்தார். ஆனால் அரசியல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் வரும் 30 ஆம் தேதி ரஜினி மக்கள் மன்றம் மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரசியல் கட்சியை அறிவிப்பாரா?
இதற்காக தொலைப்பேசி வாயிலாக அனைவருக்கும் ரஜினிகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். அரசியல் வருகை குறித்து ரசிகர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பேன் என்று ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்போகிறார். அரசியல் கட்சி தொடங்குவது பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா பார்க்கலாம்.