எம்.ஜி.ஆராக உருவெடுப்பார் ரஜினிகாந்த்... குருமூர்த்தி கணிப்பு
சென்னை: ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டால் இன்னொரு எம்.ஜி.ஆராக உருவெடுப்பார் என்று ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் என்று அறிவித்த போதில் இருந்து, பாஜகவுடன் இணைவார் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்து கூறப்பட்டன. அதே நேரம், பாஜக தலைவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் அழைப்பு விடுத்தனர்.
தீவிர அரசியல் களத்தில் குதிக்க நேரம் பார்த்து வரும் ரஜினிகாந்த், அவ்வப்போது, தெரிவிக்கும் கருத்துகள் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. பாஜக தேர்தல் அறிக்கையில் நதிநீர்இணைப்பு என்ற வாக்குறுதி இடம்பெற்றிருந்தது. அதே சமயம், நதிநீர்இணைப்பை ஆதரிக்கும் கட்சிக்கு ஆதரவு என சூசகமாக தெரிவித்தார்.
உடனே பறந்த போன் கால்.. அவர்களை நம்பி நாங்களும் கெட்டோம்.. அதிமுக மீது கோபத்தில் அமித் ஷா!
மோடிக்கு வாழ்த்து
நடந்த முடிந்த தேர்தலில், பாஜக 303 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. வாக்கு எண்ணிக்கையன்று பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்தது. இதனைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த், மோடிக்கு உடனடியாக வாழ்த்து செய்தியை பதிவிட்டார்.
சாதித்து விட்டீர்கள்
அதில், " மதிப்பிற்குரிய நரேந்திர மோடிஜிக்கு இதயப்பூர்வ நல்வாழ்த்துகள். சாதித்து விட்டீர்கள். இறைவனின் ஆசிர்வாதங்கள் என்று தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். முன்னதாக, மோடியின் திட்டங்களுக்கும் ரஜினிகாந்த் சபாஷ் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது வாய்ப்பில்லை
இதற்கிடையே, தமிழகத்தில் 38 தொகுதிகளை திமுக - காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியுள்ளது. 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலில் அதிமுக போதிய இடங்களைப் பெற்றதால் ஆட்சி மாற்றம் இல்லை என்ற நிலையே உள்ளது. எனவே, சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக இருப்பதாக கூறி இருக்கும் ரஜினிகாந்த், கட்சி ஆரம்பிக்க இன்னும் இரண்டு வருடங்கள் ஆகக்கூடும் என்று அரசியல் கட்சி விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எம்.ஜி.ஆராக உருவெடுப்பார்
இந்நிலையில் பத்திரிகையாளரும், பாஜக ஆதரவாளருமான ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி கூறுகையில், எம்.ஜி.ஆரைப் போல ரஜினிகாந்தும் ஆன்மிகத்திலும், தேசியத்திலும் நம்பிக்கை கொண்டவர். அதிக மக்கள் செல்வாக்கு கொண்டவர். எனவே அவர் தனிக்கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டால் இன்னொரு எம்.ஜி.ஆராக உருவெடுப்பார் என்றார்.
சாதிப்பார்
பாஜகவுடன் ரஜினி கூட்டணி அமைக்க வேண்டும் என நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆனால் இதுபற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும். ரஜினி அரசியலில் சாதிப்பார் என்பது எனது நம்பிக்கை என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அமைதியாக அரசியலில் நுழைந்த கமல்ஹாசன், இந்த தேர்தலில் கனிசமான வாக்குகளை பெற்று, அசத்தி இருக்கிறார். இதனால், சில அரசியல் கட்சிகள் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.