வழக்கமா ரஜினிதானே வாய்ஸ் தருவார்.. அவருக்கு ஏன் கராத்தே கொடுக்கிறார்.. நம்பலாமா வேண்டாமா!
சென்னை: அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன். சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறி இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது. 2021ல் சட்டமன்ற தேர்தலை தமிழகம் சந்திக்க இருக்கிறது.
இந்த நிலையிலும் அவர் அரசியலுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆனால், கராத்தே தியாகராஜன் போன்றோர் போகிற போக்கில் கூறிச் செல்வதை நம்பி விட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
2017, டிசம்பர் 31ஆம் தேதி தனது ராகவேந்திர திருமண மண்டபத்தில் இருந்து அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். அப்போது, நான் அரசியலுக்கு வருவேன். சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவேன். ஆன்மீக அரசியலாக இருக்கும் என்று ரசிகர்கள் கரகோஷம் எழுப்ப தெரிவித்து இருந்தார்.
ரஜினிகாந்த் நவம்பருக்குள் கட்சி துவங்குவாராம்... அழகிரி நீக்கமாம்... சொல்கிறார் கராத்தே!
பட்டும்படாமல் இருக்கிறார்
ஆனாலும், தமிழக அரசியலில் தன்னை பெரிதாக ஈடுபடுத்திக் கொள்ளாமல் ஒதுங்கியே இருக்கிறார். வாய்ப்பு தனது கைக்கு நழுவி வரும் என்று நினைக்கிறாரா என்றும் தெரியவில்லை. தமிழகத்தில் நடக்கும் எந்த நிகழ்வுகள் குறித்தும் தனது கருத்துக்களை வெளியிடாமல் ஒதுங்கியே இருக்கிறார். எப்போதாவது தனது சொந்த வேலை காரணமாக வெளியூர் செல்லும்பட்சத்தில் தனது வீட்டின் முன்பு அல்லது விமான நிலையத்தில் வைத்து பேட்டி அளிப்பது என்பதுடன் நிறுத்திக் கொள்கிறார்.
தூத்துக்குடி குறித்து சர்ச்சை
இவரது பேட்டிகளில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இவர் தெரிவித்து இருந்த கருத்துதான் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி உள்ளனர். போலீசார் செய்தது சரியே என்பது போல் அவரது பேட்டி அமைந்து இருந்தது. இதற்கு பெரிய அளவில் எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பி இருந்தது. இதையடுத்து, கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த ஆறுதலும் கூறவில்லை.
ஏழு தமிழர் யார்
ராஜீவ் காந்தி கொலையில் ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டபோது, யார் அந்த ஏழு பேர் என்று கேட்டு இருந்தார். இதையடுத்து, சிஏஏ சட்டத்திற்கு எதிராக எந்தக் குரலையும் ரஜினிகாந்த் எழுப்பாமல் இருந்தார். இந்த நிலையில், இதுகுறித்த கேள்விக்கு, ''சிஏஏ சட்டத்தால் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக நான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்'' என்றார்.
காலம் தாழ்ந்த கருத்துக்கள்
வன்முறையில் 20 பேர் பலியானதற்கு உள்துறை அமைச்சகத்தின் தவறா என்ற கேள்விக்கு, உளவுத்துறை தோல்வி என்பது உள்துறை அமைச்சகத்தின் தோல்வி என்று தெரிவித்து இருந்தார். மிகவும் காலம் தாழ்த்தி இதற்கான கருத்தையும் அளித்து இருந்தார். அதுவும் பத்திரிக்கையாளர்கள் அவரை அணுகி கேட்டபோது, இதற்கு பதில் அளித்து இருந்தார். தானாக முன் வந்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
துக்ளக் விழா பேச்சு
இதற்கு முன்னதாக துக்ளக் நாளிதழின் 50ஆம் விழாவில் பேசி இருந்த ரஜினிகாந்த், ''சோவை ஆளாக்கிய இரண்டு எதிரிகளில் ஒருவர் பக்தவச்சலம். மற்றொருவர் கருணாநிதி. முரசொலியை கையில் வைத்திருந்தால் அவர் தி.மு.க-காரர்; துக்ளக் கையில் வைத்திருந்தால் அவர் அறிவாளி. சேலத்தில் நடந்த மாநாட்டில் ராமர் படத்தை பெரியார் செருப்பால் அடித்தார். இதுதொடர்பான செய்தியை வெளியிட்ட துக்ளக் இதழுக்கு கருணாநிதி அரசு தடை விதித்தது'' என்று பேசி தமிழகத்தில் விவாதத்தை கிளப்பினார். இவரது இந்தப் பேச்சு பெரிய விவாதத்துக்கு இழுத்துச் சென்றது.
தந்தை மகன் கொலை வழக்கு
சமீபத்தில் கூட சாத்தான்குளம் தந்தை, மகன் மீதான போலீசாரின் அத்துமீறல் குறித்து எந்தக் கருத்தையும் கூறவில்லை. தேசிய அளவில் இந்த சம்பவம் விவாதமாகிக் கொண்டு இருக்கும்போது அமைதியாக இருந்தார். போலீசாரை கைது செய்யும் அன்று தனது கருத்தை வெளியிட்டார். இதுபோன்ற தாமதமான மக்கள் பிரச்சனைகள் தொடர்பான இவரது கருத்துக்கள் அனைத்தும் பின்னடைவையே ஏற்படுத்தி உள்ளது. அரசியலுக்கு வரவேண்டும் என்ற உந்துதல் இருக்கும்பட்சத்தில் மக்களுடன் மக்களாக நின்றால்தான் அதற்கான பலனும் கிடைக்கும்.
அதுக்கு சரிப்பட மாட்டேன்
சமீபத்தில் கூட தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசி இருந்த ரஜினிகாந்த் திடீரென, தற்போது இருக்கும் அரசியல் கட்சிகளில் இருக்கும் அரசியல்வாதிகளின் வயது 60க்கு மேல் இருக்கிறது. நான் எனது கட்சியில் 50 வயதுக்குக் கீழ் இருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன். படித்தவர்களுக்கு, ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு வாய்ப்பு கொடுப்பேன் . நான் முதல்வர் பதவிக்கு வர மாட்டேன். நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். தலைமை வெற்றிடம் இருக்கிறது. நல்ல தலைவரை உருவாக்க வேண்டும். '' என்று அந்தர் பல்டி அடித்தார்.
யார் இந்த கராத்தே
இதில் இருந்து முதல்வர் பதவிக்கு வரமாட்டார் என்பதை அவர் தெளிவுபடுத்தி இருந்தார். இதற்கு முன்னதாக இவருடன் அரசியல் குறித்துப் பேசி பேட்டி அளித்து வந்த தமிழருவி மணியனும் தற்போது கழன்று கொண்டார். இவருக்கு பதிலாக தற்போது அந்த வேலையை எடுத்து இருப்பவர் காராத்தே தியாகராஜன். இவர்தான் தற்போது ரஜினிகாந்த் சார்பில் பேட்டி அளித்து வருகிறார். ரஜினிகாந்த் அனுமதி பெற்று இவர் கூறுகிறாரா அல்லது அவராகவே கூறுகிறாரா என்பது தெரியவில்லை. இதுபோன்று கராத்தே தியாகராஜன் கூறுவது, ரஜினிகாந்திடம் அனுமதி பெற்று கூறுகிறாரா என்பது தெரியவில்லை. இதற்கு விளக்கம் அளிக்க வேண்டியது ரஜினி தரப்புதான்.
என்ன அடிப்படை
தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் நிலையில் இன்னும் கட்சியின் பெயரை வெளியிடவில்லை. நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் அரசியலுக்கு வந்தார்கள், ஜொலித்தார்கள் என்றால் அவர்களுக்குப் பின்னணியில் கட்சி என்ற பலம் இருந்தது. திமுகவில் இருந்து பிரிந்து வந்த எம்ஜிஆருக்கு அந்தக் கட்சியில் செல்வாக்கு இருந்தது. கட்சியில் இருந்து தொண்டர்கள் அவர் பின்னால் வந்தனர். ஜெயலலிதவுக்கு எம்ஜிஆர் விட்டுச் சென்ற அதிமுக என்ற கோட்டை இருந்தது. ஆனால், ரஜினிக்கு தற்போது அதுபோன்ற எந்த அடித்தளமும் இல்லை.
கட்டமைப்பு சரியில்லை
ரஜினி ரசிகர் மன்றத்தை அப்படியே கட்சியாக மாற்றலாம் என்றாலும், பெரிய அளவில் தங்களை முன்னிறுத்திக் கொள்வதில் சிக்கல்களும், குழப்பமும் ஏற்படும். இதைத்தான் தேர்தல் சமயத்தில் ரஜினி செய்யவிருக்கிறார் என்ற பேச்சும் அடிபடுகிறது. திமுக, அதிமுகவுக்கு அடுத்து மாவட்ட அளவில் ரஜினிக்குத்தான் மன்றங்கள் வலுவானதாக இருப்பதாக கூறப்படுகிறது. 1996ல் ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தபோது, அவரது குரலுக்கு மதிப்பு இருந்தது. அப்போதைய கால கட்டம் வேறு. இன்றைய அரசியல் கால கட்டம் வேறு. அரசியல் கட்சியை வளர்த்துக் கொள்ள சரியான கட்டமைப்பு தேவை. ஆனால், அந்த கட்டமைப்பை இன்னும் ரஜினிகாந்த் அமைத்துக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
எப்பத்தான் வருவீங்க சார்
அரசியலுக்கு வருகிறேன்... வருகிறேன் என்று கூறி அதற்கான செயல்களில் இறங்காமல் இருப்பதால், அவர் மீதான நமபிக்கையையும் மக்கள் இழந்துவிட்டனர். எழுச்சி ஏற்பட்ட பின்னர்தான் அரசியல் என்று கூறி இருக்கிறார். எதை இவர் எழுச்சி என்று கூறுகிறார், அதற்கான அளவுகோல் என்ன என்பது குறித்தும் எந்த பதிலையும் அறிவிக்கவில்லை. காலம் வரும்போது எல்லாம் தானாக மாறும் என்று பஞ்ச் டயலாக்கும் வைத்து இருக்கிறார். இதையும் நாம் கவனிக்கத் தவறக் கூடாது. ஆதலால் அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று முற்றிலும் ஒதுக்கி விட முடியாது.
எல்லாமே லேட்டுதானா
ரஜினியிடம் இருக்கும் மிகப்பெரிய குறையாக, எந்த முடிவை எடுத்தாலும் தாமதமாக எடுப்பது, அந்த முடிவிலும் ஒரு தெளிவு இல்லாதது, தப்பித்துக் கொள்வது போன்ற பேச்சுக்கள், பட்டும் படாமலும் பேசி செல்வது, எதையாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக சொல்வது போன்ற காரணங்களால், அரசியலில் மட்டும் ரஜினியால் எப்படி தெளிவான முடிவுகள் எடுக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நவம்பரிலாவது நடக்குமா
மேலும் அரசியல் என்றால் எதிர்ப்புகள், விவாதங்கள், சர்ச்சைகள் இருக்கும். இவற்றை ரஜினியால் எதிர்கொள்ள முடியுமா? எப்போதும் அமைதியை, சமரசத்தை விரும்பும் ரஜினிக்கு அரசியல் ஒத்துவருமா போன்ற கேள்விகளும் எழுந்துள்ளது. சினிமாவில் கடுமையாக போராடி முதல் இடத்திற்கு வந்த ரஜினியால் அரசியலில் முடியுமா என்ற சவாலும் காத்து இருக்கிறது. இப்போது நவம்பரில் ரஜினி அரசியலுக்கு வருவார் என கராத்தே பிட்டு போடுகிறார். அப்பவாச்சும் வருவாரா.. இல்லை நான் சொன்னேனா என்று சந்திரமுகி ரேஞ்சுக்கு நம்ம கிட்டேயே கேட்பாரா.. பொறுத்திருப்போம்.