"வருகிறார்" ரஜினி.. யாரையெல்லாம் கதற விடுவார்.. அவருக்கு யார் தண்ணி காட்டுவா.. செம எதிர்பார்ப்பு!
புது கட்சி தொடங்குகிறார் ரஜினிகாந்த்
சென்னை: எதிர்பார்த்ததுபோலவே ஜனவரியில் கட்சியை தொடங்க உள்ளார் ரஜினிகாந்த்.. இது சம்பந்தமான அறிவிப்பு வெளியாகி உள்ளது!
அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் அறிவித்து வருடங்கள் உருண்டு விட்டன.. ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவதற்கான எந்த ஒரு சமிக்ஞையுமே வெளிவராத நிலையில், அடிக்கடி அவரது வருகைக்கான செய்திகள் மட்டுமே அரசல்புரசலாக கசிந்து வந்தன.
ஒருசாரார் ரஜினிகாந்த் அரசியல் கட்சியையே தொடங்கமாட்டார் என்றனர்.. மற்றொரு சாரார் பாஜகவின் நெருக்கடிக்குள்ளாகி, கட்சியை நிச்சயம் தொடங்குவார் என்றார்கள்.. இதனிடையே திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ரஜினி தன் கட்சியை ஆரம்பித்து வழிநடத்துவார் என்றார்கள்.
ஆலோசனை
அதனால்தான் 3 தினங்களுக்கு முன்புநடந்த ஆலோசனை கூட்டத்தில்கூட கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. கொரோனா பரவல், லாக்டவுன் என நீடித்ததால் ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு என்பது பெரும் சந்தேகத்துக்குரியதாகவே மாறிய நிலையில், அதற்கான மாஸ் அறிவிப்பு இப்போது வெளியாகி உள்ளது.
வாக்குசாவடி
ஜனவரியில் கட்சி தொடங்குவது பற்றி ரஜினி பரிசீலித்து வருவதாக ஏற்கனவே சொல்லப்பட்டது.. ஆனால் கட்சி தொடங்கினால் கொரோனா பரவலுக்கு மத்தியில் பாதுகாப்பாக பரப்புரை செய்வது எப்படி என்ற ஆலோசனையும் நடந்தது.. கொரோனா காலத்தில்கூட ரஜினி சும்மா இருக்கவில்லையாம்.. தமிழகத்தின் அனைத்து வாக்குசாவடிகளுக்கும் தேர்தல் வேலை செய்ய ரஜினி மக்கள் மன்றத்தினரை நியமித்திருக்கிறார். இவர்கள் கட்சியின் அஸ்திவாரம் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.
போஸ்டர்
அதேபோல, ரசியலுக்கு வருவது பற்றி விரைவில் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என்று சொன்ன பிறகுதான், மக்கள் மன்ற நிர்வாகிகள் ரஜினியை அரசியலுக்கு வரச்சொல்லி போஸ்டர் ஒட்டவே ஆரம்பித்துள்ளனர்.. கொரோனா பரவல் பெருமளவில் குறைந்து வருவதுதான் ரஜினி இப்போது கட்சி தொடங்க முதல் சாதகமான விஷயம் என்கிறார்கள். அதனால், எப்படியும் மதுரையில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும், அங்குதான் தன்னுடைய கட்சியின் பெயர், கொடியை வெளியிட ரஜினி விரும்புகிறாராம்.
பெயர், சின்னம்
இதில் இன்னொரு முக்கிய தகவல் ஒன்று கசிந்து வருகிறது.. அதாவது, 2 வருஷத்துக்கு முன்பேயே கட்சி பெயர், கொடி, என்ன என்று ரஜினி முடிவு செய்துவிட்டதாக சொல்கிறார்கள்.. இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை..
கலக்கம்
"வரப்போகின்ற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதிசயம், நிகழும்" என்று ரஜினி ட்வீட்டில் தெரிவித்துள்ளது ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகளுக்கு நிச்சயம் கலக்கம் தரும்தான். அதேசமயம், உண்மையில் யாரையெல்லாம் ரஜினி கதற விடுவார்.. அல்லது அவருக்கு யார் தண்ணி காட்டப் போவது என்பதை தேர்தல் முடிவு செய்யும்.