பாஜகவுக்கு பிடிகொடுக்காமல் நழுவும் ரஜினி?.. "தர்பார்" இலக்கை நோக்கி 2020-யில் புதிய கட்சி?
Recommended Video
சென்னை: தமிழக பாஜக தலைவர் பொறுப்பை ஏற்க பாஜக கோரிக்கை விடுத்தும் பிடி கொடுக்காத ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு தர்பார் பட வெளியீட்டுக்கு பிறகு அரசியல் கட்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த் கடந்த 90-களில் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தார். அதிலும் அண்ணாமலை படத்துக்கு பிறகு அவரது அண்ணாமலை சைக்கிள் சின்னத்தை காண்பித்து மூப்பனாரின் கட்சி வாக்கு சேகரித்ததை யாராலும் மறக்க முடியாது.
கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக அவரை அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர். எனினும் அவர் பிடி கொடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு மே மாதம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்தார்.
அடுத்த தமிழக பாஜக தலைவர் இவர்தானாமே.. அறிவிப்பும் வெளியாக போகுதாம்.. பரபரக்கும் களம்!
தமிழகத்தில் சிஸ்டம்
அவர்கள் மத்தியில் பேசிய ரஜினி, தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறி அரசியலுக்கு அஸ்திவாரத்தை போட்டார். இதையடுத்து டிசம்பர் 31-ஆம் தேதி மீண்டும் வேறு மாவட்டத்து ரசிகர்களை ரஜினி சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதிகளிலும் நாம் போட்டியிடுவோம் என்று கூறினார்.
ரஜினி கட்சி
இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தங்களுக்கான புத்தாண்டு பரிசாகவே இதை கருதினர். அடுத்தடுத்து கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ரஜினி இறங்குவார் என்று எதிர்பார்த்தனர். இதோ, அதோ, தீபாவளி, பொங்கல், பட ரீலிஸ், அது.. இது... என ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன.
ரஜினி பாராட்டு
ஆனால் அவர் கட்சியை தொடங்கவில்லை. இந்த நிலையில் அண்மைகாலமாக பாஜகவுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசி வருகிறார். சமீபத்தில் கூட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை ரஜினி வெகுவாக பாராட்டினார்.
அப்பதவிக்கு
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜனுக்கு தெலுங்கானா ஆளுநராக நியமன பதவி வழங்கப்பட்டது. இதனால் அடுத்த தமிழக பாஜக தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. அந்த பதவிக்கு முன்னணி தலைவர்கள் ரேஸில் இருக்கும் நிலையில் அப்பதவிக்கு ரஜினிகாந்தும் ரேஸில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
பாஜக நிர்வாகிகள்
இதுகுறித்து பாஜக, ரஜினியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ரஜினியோ பிடிகொடுக்காமல் நழுவுவதாகவும் தெரிகிறது. மேலும் தனிக்கட்சி தொடங்குவதையே தனது ரசிகர்கள் விரும்புவதாக ரஜினி, பாஜக நிர்வாகிகளிடம் தெரிவித்துவிட்டாராம். இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமானதல்ல என்றும் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு கட்சி
பாஜகவுடன் இணைத்து பேசுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அடுத்த ஆண்டு 2020-இல் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் தர்பாரை தொடர்ந்து அவர் புதிய கட்சி தொடங்குவார் என கூறப்படுகிறது. தர்பாருக்கு பிறகு இன்னும் சில படங்கள் இருந்தாலும் அவர் கட்சி தொடங்குவது உறுதி என கூறப்படுகிறது. 2021-ஆம் ஆண்டு புதிய தர்பாரை அமைக்க இலக்கு நிர்ணயித்து ரஜினி அடுத்த ஆண்டு புதிய கட்சி தொடங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.