இனிதான் சிக்கலே.. ரஜினியின் அறிவிப்பு.. பாஜகவுக்கு கடும் நெருக்கடி.. எப்படி சமாளிக்கும்
ரஜினியின் முடிவு பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படுத்தும்
சென்னை: ரஜினியை வைத்து, திராவிட கட்சிகளுக்கு செக் வைக்க ஆரம்பத்தில் இருந்தே பாஜக முயன்று வருவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், ரஜினியின் இந்த திடீர் முடிவு பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று சொல்லிவிட்டார்.. அறிக்கை வாயிலாக அதை தெளிவுபடுத்தியும் விட்டார்.. இது மற்ற கட்சிகளுக்கு எப்படியோ தெரியாது, ரஜினி ரசிகர்களுக்கு அடுத்தபடியாக ஷாக்கை தருவது பாஜகவுக்குதான்.
ஆரம்பத்தில் இருந்தே ரஜினி, உடல்நிலையை காரணம் காட்டி ஒதுங்கினாலும் பாஜக விரட்டி விரட்டி வந்தது.. ரஜினியை களத்துக்கு கொண்டுவருவதில், அமித்ஷா தான் தீவிரமாக இருந்தார்.. அதற்காகவே அவர் நேரடியாகவே அழைப்பும் விடுத்தார்.. ரஜினியை பயன்படுத்தினால், தங்கள் கட்சியின் செல்வாக்கு உயரும் என்று கணக்கு போட்டார்.
சென்னை
இன்னும் சொல்லப்போனால் அமித்ஷா சென்னை வந்ததே ரஜினியை சமாதானப்படுத்தவேதான் என்றார்கள்.. இவர்களுக்கான சந்திப்பு நடக்கவில்லையே தவிர, குருமூர்த்தி அமித்ஷா ரூமுக்கு அன்றைய தினம் ஏன் போனார்? அவருடன் என்ன பேசினார் என்பது இப்போது வரை உள்ள வெளிவராத தகவல் ஆகும்!
செய்திகள்
இதுபோன்ற சூழலில்தான் ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக செய்திகள் வந்தன.. 31-ம் தேதி அதை பற்றி அறிவிப்பதாகவும், ஜனவரியில் கட்சியை தொடங்கி, தேர்தலில் போட்டியிட போவதாகவும் சொல்லப்பட்டது.. இது பாஜக தரப்பினருக்கு மேலும் குஷியை தந்தது.. ஒருவேளை ரஜினி கட்சி ஆரம்பித்தால், அவருடன் இணைந்து கொள்ளலாம் என்றும் பாஜக கணக்கு போட்டது.. அதாவது, பாஜக, பாமக, தேமுதிக, மநீம, அமமுக என மிகப்பிரம்மாண்டமான அணி உருவாகக்கூடும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதினர்.
ரஜினி
ஆனால், மொத்த கணக்கும் இப்போது தூள் தூளாகிவிட்டது.. கட்சியே ஆரம்பிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.. இனி பாஜகவுக்கு வேறு வழியில்லை.. அதிமுகவுக்கு அடிபணியும் நிலை ஏற்படும்.. ரஜினி என்ற மாயத்தை காட்டி இனி யாரையும் மிரட்டவும் முடியாது.. தமிழக மண்ணில் கால் ஊன்ற ஏதாவது ஒரு திராவிட கட்சியின் தயவில்தான் இந்த தேர்தலை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.
காவி சாயம்
அதுமட்டுமல்ல, கடைசி வரை தன் மீது காவி சாயம் பூசப்படாமல் ரஜினி நாசூக்காக ஒதுங்கி கொண்டுள்ளதையும் கவனிக்க வேண்டி உள்ளது.. தன் மீது காவி சாயம் பூசப்படுகிறது என்று பலமுறை பேட்டிகளில் ரஜினி பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான ஒரு மனநிலை இருப்பதையும் அவர் நன்றாகவே உணர்ந்துள்ளார்.. இவ்வளவு காலம் இல்லாமல், இப்போது அரசியலுக்கு வந்து, பாஜகவிடம் சிக்கி கொண்டு மக்களிடம் கெட்ட பெயர் கிடைத்துவிடக்கூடாது என்பதிலும் அவர் உறுதியாகவே இருப்பார் என்றே தெரிகிறது.. எப்படியோ ரஜினியின் உடல்நலம் நன்றாக இருந்தால் சரி!