ஓ.. இதற்காகத்தான் வெற்றிடம் இருக்கிறது என்கிறாரா ரஜினிகாந்த்? ரவிக்குமார் கேள்வி
சென்னை: தமிழகத்தில் இன்னும் கூட ஆளுமையான தலைமைக்கு, வெற்றிடம் நிலவுவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி ஆகிய இருவரும் மரணமடைந்த பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டு விட்டது என்ற கருத்தை தெரிவித்தவர் ரஜினிகாந்த்.
அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்காக, தனிக்கட்சி துவங்க போவதாகவும் ரஜினிகாந்த் அதிரடியாக அறிவித்தார். கட்சிக்கான பணிகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், திரைப்படங்களில் நடிக்க கூடிய வேலையிலும் ரஜினிகாந்த் பிஸியாக ஈடுபட்டு வருகிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு
கேள்வி
இதனால்தான், இன்று சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்திடம், தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக கருதுகிறீர்களா? எடப்பாடி பழனிச்சாமியும், ஸ்டாலினும் ஆளுமைகளாக வளர்ந்து வருவதாக தெரிகிறதே, என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
சலசலப்பு
இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், தமிழகத்தில் இன்னும் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என்று தெரிவித்தார். இந்த கருத்து கண்டிப்பாக அதிமுக மற்றும் திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது அக்கட்சி தலைவர்கள் அளிக்கும் பேட்டிகளில் தெரிகிறது.
ரவிக்குமார்
திமுக கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகளின் எம்.பி., ரவிக்குமார் அளித்த பேட்டியில் இது பற்றி கூறுகையில், புதிதாக கட்சி துவங்க விரும்புவர் இப்படித்தான் பேசுவார். இப்போது லோக்சபாவில் திமுக கூட்டணி தான் உண்மையிலேயே எதிர்க்கட்சி போல செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த நாட்டுக்கான அவையில் திமுகவின் குரல் தான் அதிகம் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது, ரஜினிகாந்த் எப்படி வெற்றிடம் இருப்பதாக கூறுகிறார் என்பது புரியவில்லை?
திரைப்பட துறையிலிருந்துதான் வரனுமா
ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்றவர்கள் திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள். அப்படி சினிமாவில் இருந்து, அரசியலுக்கு வந்தால்தான் வெற்றிடம் கிடையாது என்று ரஜினிகாந்த் நினைக்கிறார் போல. மற்றபடி, தமிழக அரசியலில் வெற்றிடம் என்பது கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.