ரஜினியின் செம "சிக்னல்".. மொத்த பேரையும் வளைத்து.. டாப் கியர் போட்டு மேலே வரும் திமுக.. பலே..!
ரஜினியின் முடிவுகள் அனைத்தும் திமுகவுக்கு சாதகமாகி கொண்டிருக்கின்றன
சென்னை: ரஜினி எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் அப்படியே திமுகவுக்கு லட்டு போல சாதகமாகி கொண்டிருக்கிறது.. இது திமுகவுக்கு ரஜினி தரும் மறைமுக சிக்னல் என்றும் பேசப்பட்டு வருகிறது.
ரஜினியை வைத்தே தங்கள் எதிர்காலத்தை ஓட்டிவிடலாம் என்று கணக்கு போட்டுக் கொண்டிருந்த அவரது ஆதரவாளர்களுக்கு ரஜினி, கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று சொல்லி ஷாக் தந்துவிட்டார்.
மற்றொரு புறம் கூட்டணிக்காக காத்திருந்த கட்சிகளுக்கும் ரஜினி முடிவு ஏமாற்றத்தையே அளித்தது... அதிலும் பல வருடமாக காத்திருந்தது பாஜகவுக்கும் பேரிடியாக தலையில் வந்து விழுந்தது ரஜினியின் அந்த அறிவிப்பு.
வாய்ஸ்
எனவே, தங்கள் கட்சிக்கு ரஜினி வாய்ஸ் தருவார் என்று ஆளுக்கு ஒரு பக்கம் சொல்ல ஆரம்பித்தனர்.. அதிமுக, கம்யூனிஸ்ட்டுகள், கமல், அர்ஜூனமூர்த்தி இப்படி என பலரும் சொல்லி கொண்டிருந்த நிலையில், யாருக்குமே இந்த தேர்தலில் வாய்ஸ் தர போவதில்லை என்பதை ரஜினி திட்டவட்டமாக நேற்று அறிவித்துவிட்டார்.
கெஸ்ட் ரோல்
சமீபத்தில்தான் கராத்தே தியாகராஜன் பேசுகையில் சினிமாவில் வருவது போல கெஸ்ட் ரோல் பண்ணலாமே என்று ரஜினியை தூண்டி விடப் பார்த்தார். ஆனால் இதற்கெல்லாம் அசருவாரா ரஜினி.. வாயே திறக்கவில்லை.. சுதாகரை விட்டு இன்று சுத்தபத்தமாக சொல்லி விட்டார்.. நோ கெஸ்ட்.. ஒன்லி ரெஸ்ட்டுன்னு!
2 முடிவுகள்
இதுவரை நடந்து முடிந்த சம்பவங்களில் ரஜினி எடுத்துள்ள 2 முக்கிய முடிவுகள் திமுகவுக்கு சாதமாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.. "யார் வேண்டுமானாலும் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம்" என்று ரஜினி அறிக்கை விட்டு, தெளிவுபடுத்தி இருந்தார்.. இந்தஅறிவிப்பினை அடுத்து, மறுநாளே ரஜினி மன்ற முக்கிய நிர்வாகிகள் அறிவாலயம் நோக்கி நகர தொடங்கிவிட்டனர்.
அறிவிப்பு
ரஜினி அப்படி ஒரு அறிவிப்பு வெளியிடும்போதே அது திமுகவுக்கு தந்த சிக்னல் என்றே பார்க்கப்பட்டது.. ரஜினியின் வருகையால் நிச்சயம் திமுகவுக்கான வாக்குகள் சிதறும் என்றும், முக்கியமாக இந்துத்துவா ஓட்டுக்களை ரஜினி அள்ளி கொண்டு போய் விடுவார் என்றே கணிக்கப்பட்டது.. அல்லது ரஜினி தலைமையில் எந்த அணி உருவானாலும் அந்த அணி திமுகவின் வாக்கை சிதறடித்துவிடும் என்றும் கணிக்கப்பட்டது.
நிம்மதி
ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை என்று ஜகா வாங்கியதுமே முதல் நிம்மதி பெருமூச்சு, அறிவாலயத்தில் இருந்து தான் கேட்டது.. அடுத்து யார் வேண்டுமானாலும் எங்கும் இணைந்து கொள்ளலாம் என்றதும், திமுக அதிரடியாக களம் இறங்கியது.. ரஜினி மன்ற முக்கிய புள்ளிகளை குறி பார்த்து தட்டி தூக்கியது.. சூட்டோடு சூட்டாக அவர்களுக்கு பொறுப்பையும் தந்து அசத்தியது.
சொந்த கட்சி
இதற்கு நடுவில்தான், அர்ஜூன மூர்த்தி என்ட்ரி ஆனார்.. திமுகவுக்கு, மன்ற நிர்வாகிகள் திரண்டு கொண்டிருப்பதை பார்த்து, சொந்தமாக ஒரு கட்சியை ஆரம்பிப்பதாகவே முடிவு செய்துவிட்டார்.. அதற்காக ரஜினியின் ஆசிர்வாதத்தையும், ரசிகர்களின் ஆதரவையும் வெளிப்படையாகவே வாய்விட்டு கேட்டார்.. இதற்குதான், "அர்ஜுனமூர்த்தி கட்சி தொடங்கினால் அதற்கும், ரஜினி மக்கள் மன்றத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை" என்று நறுக்கென நேற்று தெளிவுபடுத்தப்பட்டது.
முக ஸ்டாலின்
ரஜினியின் இந்த முடிவும் திமுகவுக்கே சாதமாகிவிட்டது.. இனி ஒருத்தரும் ரஜினி ரசிகர்களை சீண்ட முடியாது.. கட்டுப்படுத்த முடியாது.. கேள்வி கேட்க முடியாது.. ஆசை வார்த்தை கூறி பணிய வைக்க முடியாது.. அந்த வகையில், ரஜினி ரசிகர்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே இனி முடிவுகளை எடுப்பார்கள்.. அந்த முடிவும் வழக்கம்போல் திமுகவுக்கு சாதமாகவே அமையும் என்று கருதப்படுகிறது..!