ராஜிவ் கொலை வழக்கு.. 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு உத்தரவு: ஹைகோர்ட்டில் நளினி வழக்கு
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை கைதிகளாக, சிறையில் உள்ள தன்னையும் சேர்த்து 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று, உயர் நீதிமன்றத்தில், நளினி வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், நளினி, பேரறிவாளன், முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 7 பேரும் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள்.
கால் நூற்றாண்டுக்கும் மேலாக இவர்கள் சிறையில் அடைபட்டுள்ளதை கருத்தில் கொண்டு, இந்த 7 பேரையும், விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை 2018 செப்டம்பர் 9ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அதன் மீது ஆளுநர் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில்தான், சென்னை உயர் நீதிமன்றத்தில், நளினி இன்று வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில், ஏழு மாதங்கள் கடந்தும் அமைச்சரவை தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என குறிப்பிட்டுள்ளார்.
20 ஆண்டுகள் மற்றும் அதற்கும் குறைவாக தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை, மனிதாபிமான அடிப்படையில் முன் கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக 1994ம் ஆண்டு தமிழக அரசு வகுத்த திட்டத்தின் அடிப்படையில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது என்றும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட, 2000-மாவது, ஆண்டுக்குப் பின் 3 ஆயிரத்து 700 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், நளினி தனது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு, செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட வாய்ப்புள்ளது.