ராஜீவ் கொலை வழக்கு.. எழுவர் விடுதலையில் இன்னும் தயக்கம் ஏன்.? ஆளுநருக்கு ராமதாஸ் கேள்வி
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதில் இனியும் தாமதம் கூடாது என வலியுறுத்தி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கும், முதல்வர் பழனிசாமிக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 29 ஆண்டுகளாக சிறைகளில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுனரை ராமதாஸ் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்
மேலும் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தின் நகலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அனுப்பி வைத்துள்ளார். ராமதாஸ் ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது
பின் பல்வேறு காலகட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இவர்கள் 7 பேரும் கடந்த 1991-ம் ஆண்டு முதல் சிறையில் அடைப்பட்டுள்ளனர். பொதுவாக வாழ்நாள் சிறை தண்டனை என்பது நடைமுறையில் 14 ஆண்டுகள் என்றே கணக்கிடப்பட்டு, தண்டனைக் காலத்தை கழித்தவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.
தலைவர்களின் பிறந்த நாள்கள், இந்திய விடுதலை நாள், குடியரசு நாள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகளில் குறைந்த காலமே தண்டனை அனுபவித்த வாழ்நாள் சிறைதண்டனை கைதிகள் கூட நன்னடத்தையின் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டு விடுகின்றனர். ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 29 ஆண்டுகளுக்கும் மேலாக 7 தமிழர்க சிறைகளில் வாடி வருகின்றனர்
பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்.. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!
இவ்வளவு ஆண்டுகள் முழு சிறை தண்டனையை அனுபவித்த பிறகும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு இன்னும் அவர்களுக்கு கிட்டவில்லை. பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனை கடந்த 2014-ல் ஆயுள் தண்டனையாக்கப்பட்டது. அதற்கு மறுநாளே அவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது, ஆனால், மத்திய அரசின் எதிர்ப்பு காரணமான அது கைகூடவில்லை.
7 தமிழர்கள் விடுதலை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 6 -ம் தேதி அளித்தத் தீர்ப்பில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய மாநில ஆளுனருக்கு அதிகாரம் உண்டு என்று ஆணையிட்டது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 9-ஆம் தேதி கூடிய தமிழக அமைச்சரவை, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161-வது பிரிவின்படி அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 தமிழர்களையும் விடுதலை செய்யும்படி தங்களுக்கு பரிந்துரை செய்தது.
ஆனால், அந்த பரிந்துரை தங்களுக்கு அனுப்பப்பட்டு இன்றுடன் 276 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்று வரை அதன்மீது எந்த முடிவையும் தாங்கள் எடுக்காதது வருத்தமளிக்கிறது. 7 தமிழர்கள் விடுதலைக்கு சட்டப்படியாக எந்தத் தடையும் இல்லை, அது குறித்து முடிவெடுக்க தமிழக ஆளுனராகிய தங்களுக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன. 7 தமிழர்களை விடுதலை செய்ய மாநில அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது.
7 பேரின் விடுதலைக்கு ஆதரவாக இவ்வளவு அம்சங்கள் இருக்கும் நிலையில், இந்த விஷயத்தில் முடிவெடுக்க ஆளுனராகிய தாங்கள் தயங்குவது ஏன்? எனப் புரியவில்லை. பேரறிவாளன் போன்றவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. திரிக்கப்பட்ட வாக்குமூலத்தால் தான் அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்பது பலருக்கும் தெரியும். அவர்கள் அனுபவிக்க வேண்டிய தண்டனையை விட அதிகமாக சிறைவாசம் அனுபவித்து விட்டனர்.
எனவே இனியும் தாமதிக்காமல் தமிழக அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய உரிய ஆணைகளை பிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்வதாக என ராமதாஸ் கடிதத்தில் கூறியுள்ளார்