வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழாவுக்கு வருவதை தவிர்த்தார் ராஜ்நாத்சிங்.. பரபர பின்னணி
சென்னை: சென்னையில் கவிஞர் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க கூடிய ஒரு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்பதை கடைசி நேரத்தில் தவிர்த்துள்ளார் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
லோக்சபா எம்பியான பாரிவேந்தர் நடத்தக்கூடிய சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் இன்ஸ்டியூட் ஆப் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வரும், சனிக்கிழமை சிறப்பு பட்டமளிப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பிரபல கவிஞர் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது.
ராஜ்நாத்சிங் வரவில்லை
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிகழ்ச்சியை அவர் ரத்து செய்துவிட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆண்டாள் பற்றி கருத்து
ஆழ்வார்களில் ஒருவரான, ஆண்டாள் தொடர்பாக வைரமுத்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து, அதற்கு, தமிழக பாஜக தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்ததை ராஜ்நாத் சிங்கிற்கு தமிழக பாஜக நிர்வாகிகள் நினைவுபடுத்தியதாகவும், எனவே இந்த நிகழ்ச்சியை தவிர்த்து விடுமாறு கேட்டுக் கொண்டதாகவும், இதை அவர் ஏற்று சென்னை வருகையை தவிர்த்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சின்மயி குற்றச்சாட்டு
இது தவிர பின்னணி பாடகி சின்மயி வைரமுத்து மீது metoo என பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இதுவும் கூட ராஜ்நாத்சிங் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ராஜ்நாத் சிங் வருகை தராவிட்டாலும், குறிப்பிட்ட தேதியில் பட்டமளிப்பு விழா நடைபெறும் என்றும், வேறு சில சிறப்பு விருந்தினர்கள் இதில் பங்கேற்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைரமுத்து மறுப்பு
வைரமுத்து மீது சின்மயி மட்டுமின்றி அவரை தொடர்ந்து சுமார் 6 பேர் பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். இதற்கு வைரமுத்து நேரடியாக பதில் அளிக்காவிட்டால் கூட, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். இது மற்றுமொரு முயற்சி. காலம் உண்மையை வெளிக்கொண்டு வரும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.