இனி எதற்கு முக்காடு.. பகிரங்கமாகவே பாஜகவுடன் கை கோர்க்கலாம் ரஜினி
இனி தயக்கம் இல்லாமல் ரஜினி பாஜகவுக்கு ஆதரவு தரலாம்
Recommended Video
சென்னை: ரஜினி பேச்சு எதை உணர்த்துகிறது? முழுசா நெனஞ்சாச்சு.. இனி முக்காடு தேவையில்லை என்பதா, அல்லது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்பதா?
நான் அரசியலில் இன்னும் முழுசா இறங்கவில்லை. இதனால் நான் முழுசா இறங்கும்போது சொல்கிறேன் என்று சொல்கிறார். அரைகுறையாக சொல்லும்போதே பாஜக வாடை அதிகமாக அடிக்கிறது. இன்னும் முழுசா இறங்கிவிட்டால்??? என்னாகுமோ தெரியவில்லை.
தமிழுருவி மணியன்
ஆனால் ரஜினியும் மோடியும் சேர்ந்தால் தமிழகத்தில் வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்று துக்ளக் குருமூர்த்தி அன்று சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. ரஜினிகாந்தை தொடர்ந்து சந்திப்பவர்களில் ஒருவரான தமிழருவி மணியன், ‘பாஜக.வுடன் ரஜினி சேர்ந்தாலும், அதை நான் சகித்துக் கொள்வேன்" என்று சொன்னதின் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது.
[பதவிக்கு தக்கபடி பேசுங்கள்.. நான் திருப்பி கேட்டால் என்ன ஆகும்.. அமைச்சர் மீது சீறிய ரஜினிகாந்த்]
முழு அர்த்தம் இதுவா?
குருமூர்த்தி கருத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசனிடம் கேட்கப்பட்டதற்கு ‘இதற்கு காலம் பதில் சொல்லும்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. தமிழிசை முதல் எச்.ராஜா வரை ரஜினி பற்றி இதுவரை எந்த எதிர்மறை கருத்துக்களையும் கூறியதற்கு அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. முக்கியமாக ஆன்மீக அரசியலின் முழு அர்த்தம் இவ்வளவு நாள் இல்லாததைவிட இன்றைக்குத்தான் முழுசும் புரிகிறது.
உண்மை முகம்
ரஜினி குழப்புகிறார்... குழப்புகிறார் என்று சொன்ன மக்களுக்கு இன்று ரஜினியின் உண்மை முகம் தெரிந்திருக்கும். எவ்வளவு விவரமாக ரஜினி இத்தனை நாள் செயல்பட்டிருக்கிறார் என்ற அரசியல் நிலைப்பாடு அப்பட்டமாக தெரிந்திருக்கும். காவிரி விவகாரம், எச்.ராஜாவின் பெரியார் சிலை விவகாரம், கர்நாடகாவில் பாஜகவை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்தது குறித்து கருத்து என பாஜகவுக்கு எதிராக ரஜினி சொன்னது உண்மைதான். பதிலடி கொடுத்தார் என்பதும் உண்மைதான்.
10 பேர் - ஒருத்தர்
ஆனால் இவையெல்லாம் ஊடகங்கள் பெரிதுபடுத்தாமல் விடப்பட்டதே ஏன்? பாஜகவின் பிம்பம் ரஜினி என்பது உடையாமல், அந்த இமேஜ் கெடாமல் ஊடகங்கள் இவ்வளவு காலமும் சிறப்பாக செயல்பட்டன. பாஜகவுக்கு எதிர்ப்பாக சொன்னாலும் மக்கள் அதை முழுவதுமாக நம்பாமல், பாஜகவின் பலி ஆடுதான் ரஜினி என்றும் பாஜகவின் பிம்பம் என்றும் கருத்துக்கள்தான் பலமாகவே வலம் வந்தன. உண்மையிலேயே பாஜக பக்கம் ரஜினியை இழுக்க பல சக்திகள் முயன்று கொண்டுதான் இருந்தன. அதன் வெளிப்பாடுதான் இப்போது ரஜினி வாயால் 10 பேர் என்றும், ஒருத்தர் என்றும் வருகிறது.
எப்படி செயல்படுவார்கள்
எப்படியோ ரஜினி ஒரு வழியாக தனது உள் மனதை ஓரளவு வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார்.. தெரிந்தோ, தெரியாமலோ.. இனி பாஜகவின் எதிரிகள் தாங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை புரிந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.