பாசம் வைக்க.. நேசம் வைக்க.. தோழன் உண்டு.. அம்பரீஷ் - ரஜினியின் ஆழமான நட்பு
ரஜினியும் அம்பரீஷூம் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள்.
Recommended Video
சென்னை: நெருங்கிய நட்பு உறவில் ரஜினியால் தவிர்க்க முடியாததும், உணர்வுபூர்வமானதும் மறைந்த அம்பரீஷின் நட்பும் ஒன்று!!
ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் தாண்டி இருவருக்குமே நல்ல இணக்கமான உறவு நீடித்து வந்திருக்கிறது. இது இப்போது நேத்து பழக்கம் இல்லை. 40 வருடத்திற்கும் மேலான பழக்கம். இணைந்து நடித்தது என்னவோ தமிழில் ஒரு சில படங்கள்தான். ஆனால் நட்பின் ஆழம் பல காலத்தை உணர்த்த கூடியது.
ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று எதிர்பார்த்தவர்களில் அம்பரீஷும் ஒருவர். அம்பரீஷ் என்றைக்கோ அரசியலுக்கு வந்து அமைச்சரும் ஆகியவர். போன வருஷம் ரஜினி, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன் என்று முதல் அரசியல் அறிவிப்பை வெளியிட்டதும் அதை முதல் ஆளாக வரவேற்றது அம்பரீஷ்தான்.
[40 வருட நண்பனை இழந்துவிட்டேனே.. அம்பரீஷை பார்த்து உடைந்து அழுத ரஜினிகாந்த்! ]
ரொம்ப சிம்பிள்
இதைப்பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அம்பரீஷ், "30 வருஷத்துக்கும் மேலாக ரஜினியோடு நான் பழகியவன். அந்த முறையில் சொல்கிறேன், தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை ரஜினியால் சிறப்பாக நிரப்ப முடியும். அவர் ரொம்ப சிம்பிளாக இருப்பார். மனசில் என்ன நினைக்கிறாரோ அதை அப்படியே சொல்லிடுவார். பொய் சொல்ல மாட்டார். வெளியே ஒரு வேஷம் போட தெரியாது. 2021-ல் அவர் முதலமைச்சராகவே பதவி ஏற்பார்" என்று மனம் திறந்து பேசினார் அம்பரீஷ்.
அரசியல் விவாதம்
இதேபோல, ரஜினியும் பெங்களூரு போகும்போதெல்லாம் அம்பரீஷை சந்திக்க தவற மாட்டார். தான் அரசியலுக்கு வருவதை பற்றி அம்பரீஷூடன் பலமுறை கருத்து கேட்டிருக்கிறார் ரஜினி. சிரஞ்சீவியுடன் எப்படி முக்கிய விஷயங்களை ரஜினி விவாதிப்பாரோ, அதுபோலதான் அம்பரீஷிடமும் விவாதிப்பார்.
ஆலோசனை
சில நாட்களுக்கு முன்பு அம்பரீஷ்க்கு உடம்பு சரியில்லாமல் போக ஆரம்பித்தது. இதனை கேள்விப்பட்டு, ரஜினி நிறைய முறை பெங்களூர் வந்து அம்பரீஷை பார்த்து விட்டு போயிருக்கிறார். அப்போது அவரது மனைவி சுமலதாவிடமும் அம்பரீஷ் உடல்நிலை குறித்து கேட்டும், சில ஆலோசனைகளையும் சொல்லிவிட்டு வருவார்.
ரஜினி அறிவுறுத்தல்
உடல்நிலை மிகவும் மோசமானதால், சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க சொல்லி அறிவுறுத்தியதே ரஜினிதானாம். ஏனென்றால் இந்த ஆஸ்பத்திரியில்தான் ரஜினி சில வருடங்களுக்கு முன்பு வந்து சிகிச்சை எடுத்து கொண்டு போனார்.
ரஜினியின் கண்ணீர்
ரஜினி இப்படி சொன்னவுடன்தான் மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரிக்கு குடும்பத்தினர் அழைத்து கொண்டு போயிருக்கிறார்கள். அங்கும் சிகிச்சை தொடர்ந்திருக்கிறது. எனினும் பெங்களூரில் நேற்று மரணமடைந்த அம்பரீஷின் மரணம் ரஜினியை ரொம்பவே உலுக்கி போட்டுள்ளது. நண்பனின் உடலை பார்த்து ரஜினி வடித்த கண்ணீரில் இருந்தே இந்த நட்பின் நீளம் புரியும்!!