நான் பார்த்தேன்.. நீங்களும் பாருங்க.. ஜெராக்ஸ் காப்பியை காட்டி எஸ்.ஆன ரஜினி.. பயிற்சி வேண்டுமோ!
துக்ளக் விழாவில் பேசியதற்கு ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்
Recommended Video
சென்னை: "நான் படிச்சேன்.. பார்த்தேன்.. ஸாரி கேட்க முடியாது" என்று கையில் ஒரு ஜெராக்ஸ் பேப்பரை வைத்து கொண்டு, கடகடவென ஒப்பித்து விட்டு சென்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்!
கடந்த செவ்வாய்க்கிழமை துக்ளக் விழாவில், ரஜினி பேசியபோது 1971ஆம் ஆண்டில் நடந்ததாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார். "1971ல் சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார்.
இதனால், அப்போதைய திமுக. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. இதனால் பத்திரிகை பிரதிகளை கைப்பற்றினார்கள். அந்த இதழை, மீண்டும் அச்சடித்து வெளியிட்டார். 'பிளாக்'கில் விற்றது. இப்படித்தான் கலைஞர் மிகப் பிரபலமாக்கினார். அடுத்த இதழிலேயே நம்முடைய 'பப்ளிசிடி மேனேஜர்' என சோ அட்டையிலேயே வெளியிட்டார்" என்று மளமளவென பேசிவிட்டு போனார்.
பரபரப்பு
ரஜினி பேச்சு என்றாலே சும்மாவே பரபரப்பாகிவிடும் நிலையில், அன்றைய தினம் பேசியது, தமிழக மக்களை ஒரு புரட்டு புரட்டிவிட்டது.. குறிப்பாக திகவினரின் கொந்தளிப்பை அன்றுமுதல் அடக்க முடியவில்லை.. இன்றுவரை பேசுபொருளாக ரஜினி பேச்சு சலசலக்கப்பட்டு வருகிறது. உண்மையிலேயே ரஜினி சொன்ன அந்த சம்பவத்தில் என்னதான் நடந்தது என்பதை இன்றைய இளம் தலைமுறையினர் அறிய வாய்ப்பில்லை!!
பிரச்சாரங்கள்
சுருக்கம் இதுதான்: 1971 பிப்ரவரி முழுவதும் தமிழ்நாடெங்கும் திமுகவிற்கு எதிரான பிரச்சாரங்கள் அதாவது மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரங்கள் நடந்தன.. திமுக ஆட்சிதான் நடந்து கொண்டிருந்தது.. கருணாநிதியின் அனுமதியை பெற்றுதான் பிரச்சாரமும் நடந்தது..
செருப்புகள்
அப்போது பெரியாரின் வாகனத்தை நோக்கி ஜன சங்கத்தினர்தான் செருப்பு வீசினர்.. இதை பார்த்து ஆத்திரமடைந்த திகவினர், அதே செருப்பை எடுத்து ஜனசங்கத்தினரின் வாகனம் ஒன்றில் இருந்த ராமர் படத்தில் அடித்தனர். இதுதான் அடிப்படை சம்பவம்.. ஆனால், ராமரை செருப்பால் அடிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் யாருக்கும் கிடையாது... திகவினரின் எதிர்வினைதான் பெரிதுப்படுத்தப்பட்டுவிட்டது.
தலையங்கம்
அப்போதுகூட "பொறுமையாய் இருங்கள் தோழர்களே" என்று ஒரு தலையங்கத்தை பெரியார் எழுதினார். "என் உருவத்தை மட்டுமல்ல, என்னையே செருப்பால் அடித்தாலும், லட்சியமோ, கவலையோ கொள்ளாதீர்கள். இது நமக்குப் புதிதல்ல" என்று தொண்டர்களை ஆசுவாசப்படுத்தினார். சோ அப்போதுதான், "துக்ளக்" பத்திரிகையை துவங்கிய நேரம்.. இதைதான் தலைப்பு செய்தியாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதுதான் நடந்தது!! இதை திகவினரும் உறுதிப்படுத்தி வருகின்றனர்.
திரித்து கூறினார்?
இதைதான் ரஜினி துக்ளக் விழாவில் பேசினார்.. ஒரு கருத்தை யார் வேண்டுமானாலும் முன்வைப்பதில் தவறில்லை.. ஆனால் அடிப்படை சம்பவத்தையே திரித்து கூறுவது முற்றிலும் தவறான ஒன்று.. அவசரத்தில் வரலாறு தெரியாமல் ரஜினி பேசிவிட்டார் என்று எடுத்து கொண்டாலும், இதற்கு பிறகாவது உண்மையை தெரிந்து கொண்டிருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அவரது செய்தியாளர் சந்திப்பு அந்த நம்பிக்கையையும் சுக்குநூறாக்கிவிட்டது.
அதிர்ச்சி
"நான் பேசியது சரி, நான் படிச்சதை, கேள்விப்பட்டதைதான் சொல்கிறேன்.. ஸாரி கேட்க முடியாது" என்ற பிடிவாத பேச்சு மேலும் அதிர்ச்சியைதான் ஏற்படுத்தி உள்ளது.. இது ஒரு வரலாற்று நிகழ்வு.. இதுதொடர்பாக இப்படி மேம்போக்காக எதையாவது பேசி விட்டுப் போவது நல்ல தலைவராக விரும்புபவருக்கு சரியாக இருக்குமா என தெரியவில்லை.
நுனிப்புயல் மேய்வதா?
ஒரு பத்திரிகையை விற்பதற்காக, வியாபார நோக்கத்திற்காக ஆயிரம் பேர் ஆயிரம் விஷயங்களை எழுதினாலும், அதை பகுத்தறிந்து பார்ப்பதே மேன்மையான குணம்.. இப்படி நுனிப் புயல் மேய்வது அரசியல் தலைவராக விரும்புபவருக்கு சரி வருமா என்பது தெரியவில்லை. ரஜினியின் பேச்சு அரைகுறைதன்மையை வெளிப்படுத்துகிறது என்று எடுத்து கொள்வதா, அல்லது இப்படித்தான் பேச வேண்டும் என்று யாரோ சொல்லி கொடுத்து பேச வைத்துள்ளார்களா என்றும் புரியவில்லை.
கவனம்
ஆனால், நாலு பேரிடம் கேட்க வேண்டும், உண்மை எது என்று ஆராய வேண்டும் என்ற உந்துதல் அவருக்கு இந்த செகண்ட் வரை வரவில்லை.. காரணம் இது சென்சிட்டிவ் விஷயம்.. இதனால் கலவரங்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் கூட உண்டு என்றெல்லாம் இருக்கும்போது கூடுதல் கவனம் எடுத்திருக்க வேண்டும்.. குறைந்தபட்சம் இதை பற்றி பேசாமலாவது ரஜினி இருந்திருக்கலாம்.. அதைவிட்டுவிட்டு கையில் ஜெராக்ஸ் பேப்பரை வைத்து கொண்டு, "நான் படித்தேன்.. பார்த்தேன்.. நீங்களும் பாருங்க" என்று சொல்வது நாட்டை ஆள வேண்டும் என்ற நப்பாசையில் இருப்பவருக்கு அழகல்ல.
வாக்குமூலம்
பத்திரிகை ஆதாரங்கள் எல்லாம் வாக்குமூலங்களா என்ன... அப்படி பார்த்தால், இதே ரஜினியை பற்றி அப்போதைய பத்திரிகைகள் தாறுமாறாக எழுதிய எல்லாம் நாம் உண்மை என்று எடுத்து கொள்ளலாமா? அதற்கான ஜெராக்ஸ் பேப்பர்களை நாமும் எடுத்து காட்டினால் ரஜினி சரி என்று சொல்வாரா? என்ற சந்தேகமும் நமக்கு எழுகிறது.
கொந்தளிப்பு
இன்றைய தினம் செய்தியாளர்களும் தெளிவான கேள்விகளை கேட்கவில்லை... ரஜினியும் விளக்கமாக எதையும் பேச முன்வரவில்லை... வழக்கம்போலவே எதையோ பேசிவிட்டு போனதுடன், திகவினரின் ஆத்திரத்தை மேலும் கிளப்பி விட்டு போயுள்ளார் என்பது மட்டும் தெரிகிறது.. ஆனால் இன்னமும் ரஜினியை நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு ஒன்றே ஒன்றுதான் நமக்கு சொல்ல தோன்றுகிறது.. "பால் பொங்கும், ஆனால் பச்ச தண்ணி பொங்கவே பொங்காது"!