கேட்டு கேட்டு சலிச்சு போச்சு.. மக்களுக்கு கொஞ்சம் கூட ஷாக்கே வரலையே ரஜினி சார்!
வரப்போகிற தேர்தலில் யாருக்குமே தனது ஆதரவு இல்லை என ரஜினி சொல்லியிருக்கிறார்.
Recommended Video
சென்னை: இன்னும் கட்சியே ஆரம்பிக்காத ரஜினி... அரசியலுக்கு இப்போ வருகிறேன்... அப்போ வருகிறேன்.... என்று இழுத்தடித்துக் கொண்டிருக்கும் ரஜினி... திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
அதில் 2 விஷயங்களை முக்கியமாக சொல்லி இருக்கிறார். ஒன்ற, வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை இரண்டாவது யார் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லி உள்ளார்.
ரஜினியின் இந்த 2 கருத்துக்களுமே தமிழக மக்களுக்கு எந்த விதத்திலும் ஷாக் தரப்போவதில்லை. அதிலும் முதலாவது ஸ்டேட்மெண்ட்டை 20 வருஷங்களாக பார்த்துபார்த்து பழக்கப்பட்டு, ஜீரணித்து கொள்ளும் மனப்பக்குவம் உடையவர்கள் மக்கள்.
பரபரப்பு
தன் படங்களை வெற்றிபடங்களாக ஓட வைக்க எதையாவது சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி ரசிகர்களை உசுப்பேத்தி விடுவது, பிறகு படங்கள் வெற்றி பெற்றவுடன், எதுவுமே சம்பந்தமே இல்லாத மாதிரி பேசிவிடுவதுதான் ரஜினியின் வழக்கமாக இருக்கிறது என்பதை நன்றாக அறிந்தவர்கள்.
பாதிப்பு இல்லை
பேட்ட, கபாலி பட ரிலீசுக்கு முன்பு திடீரென ஒருநாள் வந்து 234 தொகுதிகளிலும் போட்டியிட போறேன்னு சொல்லும்போதே விழிப்புணர்வு மக்களுக்கு அதிகமாகி விட்டது. ரஜினியின் இந்த வியாபார யுக்தியில் யாரும் விழுந்துவிடவும் இல்லை, எந்தவிதத்திலும் பாதிப்படைந்து விடவும் இல்லை.
மக்கள் மன்றங்கள்
ஆனால் சில சந்தேகங்கள்தான் எழுகின்றன. தமிழ்நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத ரசிகர் மன்றங்கள் கிட்டத்தட்ட 60 ஆயிரம் உள்ளன. அவை அனைத்தும் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றம் செய்யப்பட்டது எதற்காக? அதற்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடந்து, அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டது எதற்காக?
என்ன பதில்?
நாளை கட்சி ஆரம்பிப்பார் என்று நம்பி உறுப்பினர்களாக இருப்பவர்களின் நிலை? அவர்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறார் ரஜினி? போர் வரட்டும், தயாராக இருங்கள் என்று சொன்னாரே, அதை நம்பி இன்னமும் தயாராக இருக்கும் ரசிகர்களுக்கு இப்போது ரஜினி என்ன பதில் சொல்ல போகிறார்? போன்ற சந்தேகங்கள்தான் ஏற்பட்டுள்ளன.
யார் நம்புவார்கள்?
அதேபோல, தண்ணீர் யார் தர்றாங்களோ அவங்களுக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்லுகிறார் ரஜினி, அரசியலில் இன்னும் சரியான முடிவை எடுக்க தெரியாமல் திணறும் ரஜினியின் இந்த பேச்சை யார் மதித்து நடப்பார்கள்? ரஜினியை நம்பும் தொண்டர்கள் மட்டும் எப்படி சரியான நபர்களை கண்டுபிடித்து வாக்களிப்பார்கள்? இவரது கொள்கை என்ன என்று இந்த நாள் வரை நமக்கு தெரியாது. இதுதான் தன் கொள்கை என சொல்ல முடியாத கொள்கையை பின்பற்றிதான் வந்து கொண்டிருக்கிறார்.
யாரை சொல்கிறார்?
தண்ணீர் தர்றவங்களுக்கு ஓட்டு போடுங்க என்றால் ரஜினி யாரை சொல்கிறார்? இதுவரை அப்படி யாரும் மக்களுக்கு தண்ணீர் பிரச்சனையை தீர்க்கவில்லை என்றுதான் தெரிகிறதே.. பிறகு ரஜினியே கட்சி ஆரம்பித்து, போதுமான தண்ணீர் மக்களுக்கு தந்திருக்கலாமே என்ற மக்களின் ஆதங்க பேச்சும் காதில் விழத்தான் செய்கிறது.
பாஜகவுக்கு ஓட்டு?
சமீபத்தில் பாஜக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில், கோதாவரி- பாலாறு- பென்னாறு- காவிரி நதி நீர் இணைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிட்டது. கோதாவரி உபரி நீரை தமிழகத்துக்கு திருப்பிவிடுதல் என்பது அதில் முக்கியமான ஒன்று. அப்படியானால் தண்ணீர் இனிமேல் தரப்போவது பாஜகதான், அதற்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறாரா? என தெரியவில்லை. ஆக மொத்தம் இப்போதுவரை ரஜினி பளிச்சென பேசாமல் இருக்கிறாரே என்பதுதான் பரவலான பேச்சாக உள்ளது.