காவிக்கு நான் சிக்க மாட்டேன்.. என்ன சொல்ல வருகிறார் ரஜினிகாந்த்??
காவி சாயம் பூச முடியாது என்று ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்
Recommended Video
சென்னை: "வள்ளுவரை போல தன் மீதும் பாஜக சாயம் பூச முடியாது என்றும், வள்ளுவரும் சிக்க மாட்டார், தானும் சிக்க மாட்டார்" என்று வெளிப்படையாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். வெறும் நிறத்தினால் எதையும் சாதித்துவிட முடியாது என்ற தமிழக மக்களின் ஆழ்மனதின் எண்ணத்தை ரஜினியின் பேட்டி வெளிப்படுத்தி உள்ளது.
பாஜகவின் நிழல், பாஜகவின் ஆதரவாளர் என்ற பிம்பத்தை இதுவரை தாங்கி வந்தவர் ரஜினிகாந்த். தங்கள் கட்சியில் ரஜினியை இணைத்து கொள்ள வேண்டும் என்று பாஜக பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது தெரிந்த சமாச்சாரமே.
ஒருசில சமயங்களில் அவரது நடவடிக்கைகள் பாஜகவின் ஆதரவாளராகவே வெளிப்படையாக தெரிந்தது. பாஜக தரப்பு என்ன சொன்னாலும், அதற்கு எதிர்வினையாற்றாத நிலையில் அவரும் உடன்படுகிறார் என்றுதான் தமிழக மக்களின் மனதில் பதிந்து போன ஒன்றாகிவிட்டது.
எனக்கு காவி சாயம் பூச முயற்சி.. வள்ளுவரும் சிக்க மாட்டார்.. நானும் மாட்ட மாட்டேன்.. ரஜினி அதிரடி
விருது
இதில், ஒரே ஆறுதல்... இதுவரை நேரடியாக தன்னை பாஜகவில் பகிரங்கமாக இணைத்து கொள்ளாததுதான். தமிழக பாஜகவுக்கு தலைவர் நியமனம், வாழ்நாள் சாதனையாளர் விருது, பொன்.ராதாகிருஷ்ணனின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு நடுவில் இன்றைய ரஜினி பேச்சு வந்து சேர்ந்துள்ளது.
பேட்டை படம்
பேட்ட படத்திலேயே இந்துத்துவா கொள்கைக்கு எதிரான கருத்தைதான் வெளிப்படுத்தியிருந்தார். இதுபோலவே, தனது அரசியல் நிலைப்பாட்டையும் ரஜினி அமைத்து கொள்ள விரும்புகிறாரா என்ற கேள்வியையும் இந்த பேச்சு எழுப்பியுள்ளது.
பணமதிப்பிழப்பு
பணமதிப்பிழப்பு விவகாரத்தில் முதல் ஆளாக ட்வீட் போட்டு வரவேற்ற ரஜினி, பிறகு அந்ததிட்டம் தவறானது என்று ஒப்புக் கொண்டார். அதுபோல, இப்போதைய நிலைப்பாட்டில் ரஜினி உறுதியாக இருப்பாரா என்பதும் எதிர்பார்ப்புக்குரிய ஒரு கேள்வியாகும்.
எதிர்பார்ப்பு
வழக்கமாக ரஜினி எது பேசினாலும் பலர் எதிர் கருத்துக்களை அதிக அளவில் வைப்பார்கள். ஆனால் இந்த முறை பலரும் குறிப்பாக இதுவரை ரஜினிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இல்லாதவர்களும் கூட வரவேற்றுள்ளது ஆச்சரியகரமானது.
வெறும் நிறம்
நடிகர் ரஜினிகாந்த் தமிழக மக்களுக்கு பொதுவானவர்.. அனைவராலும் நேசிக்கப்படக்கூடியர். இதை ரஜினியும் உணர்ந்திருக்கிறார். இதனால்தான் அவர் காவியை வைத்து இன்று தனது கருத்தைப் பதித்துள்ளதாக தெரிகிறது.