லேட்டா வந்தா சரி.. ஆனால் இப்படி லேட் பிக்கப்பா இருந்தா எப்படி??
பணமதிப்பு நீக்கம் தவறானது என்று தாமதமாக கருத்து கூறியுள்ளார் ரஜினி.
Recommended Video
சென்னை: வழக்கம்போல் எதையாவது கருத்து சொல்கிறேன் என்று சொல்லி இந்த முறையும் ஏடாகூடாமாக கருத்து சொல்லி பல்பு வாங்கி இருக்கிறார் ரஜினிகாந்த்!
2 வருடத்திற்கு முன்னாடி பிரதமர் மோடி பணமதிப்பு நீக்கம் பற்றி அறிவிப்பை வெளியிட்டார். ஒரு கவர்னரோ, அல்லது நிதி அமைச்சரோ அறிவிக்க வேண்டிய விஷயத்தை பிரதமர் இப்படி தன்னிச்சையாக அறிவிக்கிறாரே என்றுகூட யோசிக்காமல், தடாலடியாக அதுவும் முதல் ஆளாக வரவேற்று கருத்து சொன்னார் ரஜினிகாந்த்.
[பண மதிப்பிழப்பு திட்டத்தை அமல்படுத்திய முறை தவறு.. ரஜினிகாந்த் பலே பல்டி! ]
முதல் ஆளாக கருத்து
இப்படி பொறுப்பில் இருப்பவர்களையும் தாண்டி வந்து பிரதமரே இப்படி அறிவித்துவிட்டு போகிறார் என்றால், போதுமான செயல் திட்டம் இல்லாமல் செய்வாரா? அல்லது அவருக்கு ஏதாவது ஒரு பலன் இல்லாமல் அதை செய்வாரா? என்று கூட அன்று ரஜினி யோசிக்கவில்லை. இதற்காக அதிகமாக ட்விட்டர் பக்கமே வராத ரஜினிகாந்த், மோடியின் இந்த அறிவிப்புக்கு மட்டும் திடீரென ட்விட்டர் பக்கத்தில் வந்து ஒரு கருத்தை போட்டார்.
வாழ்த்துக்கள்
அதில், "நரேந்திரமோடி ஜி' க்கு வாழ்த்துகள். புதிய இந்தியா பிறக்கிறது. ஜெய்ஹிந்த்" என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து தேசிய ஊடகங்கள் அனைத்தும், "சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு வரவேற்பு". "புதிய இந்தியா பிறந்ததாக பாராட்டு" என தலைப்பு செய்திகளாக வெளியிட்டனர். பிறகுதான் ஒவ்வொன்றாக சாயம் வெளுக்க ஆரம்பித்தது. இந்த 2 வருடத்தில் பணமதிப்பு இழப்பு வெற்றியா, தோல்வியா, சரியா, தவறா? என்று வாயே திறக்கவில்லை ரஜினி.
தொழில் நசிந்துவிட்டது
இதனிடையே ஆஷ்ரம் பள்ளி வழக்கின்போது, கோர்ட்டுக்கு வந்த லதா ரஜினி, நீதிபதியிடம் சொன்ன காரணம் என்ன தெரியுமா? "பண மதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கைக்கு பின்னர் தொழில் நசிந்து விட்டது" என்று சொல்லிவிட்டு போனார். பணமதிப்பு நீக்கம் சரியல்ல, என்பதை நடிகர்கள், நடிகர் சங்கம், அவ்வளவு எதற்கு, லதா ரஜினிக்கே அன்றே தெரிந்த விஷயம் கூட ரஜினிக்கு இவ்வளவு நாள் தெரியாமல் போனது ஏன் என்று தெரியவில்லை.
குழப்பமாக உள்ளது
தற்போது இதே ரஜினிகாந்த், 2 வருடம் கழித்து, பணமதிப்பு ரத்து திட்டத்தை அமலாக்கிய முறை சரியல்ல என்று கருத்து கூறியுள்ளார். பணமதிப்பு நடவடிக்கை சரியில்லை என்று சொல்கிறார் என்றால், இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்றும் புரியவில்லை. அன்றைக்கு சரி என்பது இன்றைக்கு தவறு ஆனது ஏன்? எதை வைத்து இப்போது ரஜினி இந்த முடிவுக்கு வந்துளார் என்றெல்லாம் வழக்கம்போல் குழப்பமாகவே உள்ளது.
லேட்-பிக்-அப்
இப்படி எந்த ஒரு அறிவிப்பினை யார் சொன்னாலும், அதை என்ன ஏதென்று அலசி ஆராயாமல் தடாலடியாக கருத்து சொல்வது, பின்னர் விளக்கம் அளிப்பதும் என பொழுது போய்க் கொண்டிருக்கிறது ரஜினிக்கு. லட்சக்கணக்கானோரின் தலைவன் என்று கூறப்படுபவர், லேட்டா வந்தா சரி... இவ்வளவு லேட் - பிக்-அப்-பாக இருந்தால் எப்படி?