திமுக பெற்றது வெற்றி இல்லை.. ஸ்டாலின் மக்கள் ஆதரவு இல்லாத தலைவர்.. என்னதான் சொல்கிறார் ரஜினிகாந்த்?
Recommended Video
சென்னை: தமிழகத்தில், அரசியல், வெற்றிடம் உள்ளதாக தான் கூறிய கருத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்னமும் உறுதியாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
முன்னாள் முதல்வர்களான, ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, தமிழகத்தில், அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்தவர் ரஜினிகாந்த்.
அதேநேரம், சமீபத்தில் நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி போட்டியிட்ட 38 தொகுதிகளில் 37 தொகுதிகளை அமோகமாக வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதன் மூலம் அரசியல் வெற்றிடம் ஏதும் கிடையாது.. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்து விட்டனர் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
ஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழா.. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு!
கொள்கை அதுதான்
இது ஒருபுறம் இருக்க.. ரஜினிகாந்த் தனது கொள்கையில் இன்னும் உறுதியாக இருப்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. சென்னை போயஸ் இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் கூறிய சில கருத்துக்கள் இந்த கணிப்புகளுக்கு, வலுசேர்ப்பதாக உள்ளது. அவர் கூறியதை பாருங்கள்: இந்தியா மற்றும் தமிழகத்தில் மாபெரும் தலைவர்களை கொண்டே அவர்கள் சார்ந்த கட்சிகள், வாக்குகளை அறுவடை செய்வது வழக்கம்.
மோடி புகழ்
நேரு காலத்துக்குப் பிறகு இந்திரா காந்தி, மக்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பு மிக்க தலைவராக விளங்கினார். அதற்கு பிறகு ராஜீவ் காந்தியும் மக்கள் தலைவராக உருவெடுத்து வந்தார். ஆனால் காலம் அவரை திரும்ப அழைத்துக் கொண்டது. இதன் பிறகு வாஜ்பாய் மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு தலைவராக இருந்தார். இப்போது மோடி மக்களின் ஆதர்ஷ நாயகனாக உள்ளார்.
தமிழக தலைவர்கள்
தமிழகத்திலும் இதேபோல, காமராஜர், அதன் பிறகு அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் கரிஷ்மாட்டிக் தலைவர்களாக இருந்தனர். இவ்வாறு ரஜினிகாந்த் தனது பேட்டியின் நடுவே குறிப்பிட்டார். மோடி மக்கள் ஆதரவு மிக்க தலைவர் என்று கருத்து கூற வந்த ரஜினிகாந்த், தமிழகத்தில் உள்ள தலைவர்களையும் பட்டியலிட்டது காரணத்தோடுதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
ஸ்டாலின், ஓபிஎஸ், எடப்பாடி
ஜெயலலிதா, கருணாநிதியுடன் தமிழகத்தில் கடைசியாக, அரசியல், ஆளுமை முடிந்து விட்டது என்றுதான் ரஜினிகாந்த் தனது பேட்டியில் மீண்டும் கோடிட்டு காட்டியுள்ளார். இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய அதிமுக தலைவர்கள் ஆகட்டும், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகட்டும், அவர்களை மக்களின் ஆதர்ஷ நாயகன் பட்டியலில் வைப்பதற்கு ரஜினிகாந்த் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது. விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாக கூறி வரும் ரஜினிகாந்த், இன்னும்கூட, தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது என்பதைத்தான் தனது பேட்டியின் மூலம் உறுதிபட தெரிவித்துள்ளார். அந்த வெற்றிடத்தை தான் தான் நிரப்பப் போவதாகவும் அவர் கருதி கொண்டிருக்கக் கூடும் என்பதுதான் இந்த பேட்டியின் சாராம்சம்.
மோடி எதிர்ப்பு அலை
ஏனெனில் திமுக அணி பெற்ற இந்த வெற்றியை அந்த அணிக்கு கிடைத்த வாக்குகளாக ரஜினிகாந்த் கருதவில்லை என்பதையும், தனது பேட்டியில் தெளிவாக தெரிவித்து விட்டார் அவர். இந்தியா முழுக்க மோடிக்கு ஆதரவான அலை இருந்தது போல, தமிழகத்தில் எதிரான அலை இருந்தது. அரசியல் அலைக்கு எதிராக நிற்பவர்கள் தாக்குப்பிடிக்க முடியாது. ஆனால், அலையோடு சேர்ந்து பயணித்தவர்கள் கரை சேர்ந்து விட்டார்கள் என்று ரஜினிகாந்த் கூறியிருப்பதன் மூலம், மோடி எதிர்ப்பு அலையால், திமுக அணி கரை சேர்ந்ததே தவிர, ஸ்டாலினுக்கு தனி செல்வாக்கு இல்லை என்றுதான் சுற்றி வளைத்து ரஜினிகாந்த் கூறியுள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.