அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த்? வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த ரசிகர்கள்
சென்னை: அரசியலுக்கு வரும் முடிவை நடிகர் ரஜினிகாந்த் கைவிட்டுவிட்டது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையை வைத்துப்பார்த்தால், விரைவில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று தெரிகிறது.
மிக நீண்ட காலமாகவே, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் வருவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் நழுவிக் கொண்டே இருந்தார். ஆனால் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய பெரும் தலைவர்கள் இரண்டு பேரும் குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்த நிலையில்தான் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி ரசிகர்களுடனான தனது சந்திப்பின்போது அரசியலுக்கு வரப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ரஜினிகாந்த்.
234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று அவர் அறிவித்தபோது அரங்கமே குலுங்கும் அளவுக்கு ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர்.
ஏன் திடீர்னு ரஜினிகாந்த் பெயரில் ஒரு லெட்டர்.. இதுக்கெல்லாம் காரணம் அவங்க தானா..?
முதல் பல்டி
இதன் பிறகு பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஜினிகாந்த், தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சியை வழங்குவேன் என்று தெரிவித்தார். அதுவரை எல்லாம் ரசிகர்கள் விரும்பியபடித்தான் சென்றது. ஆனால் திடீரென, நான் கை காட்டுபவர் முதல்வராக வருவார் என்றும், தனக்கு பதவியில் ஆசை இல்லை என்றும் பல்டி அடித்தார் ரஜினிகாந்த்.
சந்தேகம்
இந்த நிலையில்தான் கொரானா பரவல் காரணமாக ரஜினிகாந்த் கட்சி துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. அவர் கட்சி துவங்குவாரா என்ற சந்தேகம் எழுந்தது. சட்டசபை தேர்தலுக்கு முன் சில மாதங்கள் தான் இருக்கும் நிலையில், இந்த கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து கொண்டிருந்தது.
போலி அறிக்கை
இந்த நிலையில் ஒரு அறிக்கை சமூக வலைதளங்களில் பரவியது. அதில் ரஜினிகாந்த் இதுபோன்ற கொரோனா பரவல் காலகட்டத்தில் மக்களை சந்தித்து அரசியல் நடத்துவது ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளதாக கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று மதியம் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் ட்வீட்
அந்த ட்விட்டர் பதிவில், என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாக பரவிக்கொண்டிருக்கிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வரவில்லை
உடல்நிலை குறித்து வெளியான கடிதம் உண்மைதான் என்று ரஜினிகாந்த் கூறி இருப்பதன் மூலம், அவர் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்பது தெரியவந்துள்ளது. ஏனெனில் அது என்னுடைய அறிக்கை இல்லை என்று ரஜினிகாந்த் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. அதில் இருப்பது உண்மைதான் என்றும் அரசியல் நிலைப்பாடு பற்றி ஆலோசித்து முடிவை எடுப்பதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துவிட்டார். எனவே மறைமுகமாக தான் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே, இத்தனை வருடமாக அவரை நம்பி காத்திருந்த ரசிகர்கள் மிகக் கடுமையான ஏமாற்றம் அடைந்துள்ளனர்.