இந்த சத்தியநாராயணா வேற அடிக்கடி ஏதாச்சும் பிட்டு போட்டுட்டே இருக்காரே!
ரஜினி மே 23-க்கு பிறகு புதிய அறிவிப்பை வெளியிடுவார் என சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்
சென்னை: சத்தியநாராயணா ஒரு பேட்டி தருகிறார் என்றாலே என்ன அர்த்தம் தெரியுமா? ரஜினி ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் என்றுதான் பொருள்!
ரஜினி படம் ஒப்பந்தம் ஆகி, ஷூட்டிங் முடிந்து, படம் ரிலீசாகும்வரை தமிழ்நாட்டில் ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணா பேட்டியை நிறைய பார்க்க, கேட்க முடியும். இப்படித்தான் இவ்வளவு காலம் நடந்து வருகிறது. இப்போதும் அப்படித்தான் ஆரம்பமாகி உள்ளது.
ரஜினி அரசியலுக்கு வருகிறார், வருவார், வரப்போகிறார், வந்துகொண்டே இருக்கிறார்.. என்று சொன்னதெல்லாம் சத்தியநாராயணாதான். இவரது இதுபோன்ற எத்தனையோ ஸ்டேட்மெண்ட்டுகளை பார்த்து ஏமாந்து நொந்து நூடூல்ஸ் ஆன ரசிகர்கள் பலர் உண்டு!
வழக்கமான பேட்டி
அடுத்த சட்டமன்ற தேர்தல், அதாவது 2 வருஷம் கழிச்சு கண்டிப்பா போட்டியிடுவேன்னு ரஜினி ஏற்கனவே சொல்லிட்டு போய்ட்டார். இதை பார்த்து ரசிகர்களும் வழக்கமான பேட்டிதானே என்று பெரிசாக ரியாக்ட் செய்யவில்லை.
டிசம்பர்
இப்போது ரஜினி நடிப்பில் புதிய படம் ரெடி ஆகி வருகிறது. இந்த சமயத்தில் 20 நாளைக்கு முன்னாடி சத்தியநாராயணா செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ரஜினி அரசியல் கட்சி துவங்குவதற்கு பின்னால் பாஜக இல்லை என தெளிவுபடுத்தியதுடன், டிசம்பரில் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடுவார் என்று சொல்லிவிட்டுபோனார்.
மே 23
இப்போது திரும்பவும் ஒரு பேட்டி தந்துள்ளார். அதில், "ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார், காலதாமதம் ஆவது நல்லதுக்குத்தான். மே 23-க்கு பிறகு ரஜினி அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்" என்று கூறியுள்ளார்.
|
கொம்பு புடிச்சு..
இதெல்லாம் சகஜம் பாஸ்.. ரஜினி படம் ரிலீஸாகும் வரை பேட்டிகளும் தொடரும்தானே என்று நெட்டிசன்கள் கலாய்க்கவே ஆரம்பித்து விட்டனர்."என்ன அவசரம். கொம்பு புடிச்சு நடந்து வரும் வரை நடித்து விட்டு பிறகு வரச் சொல்லுங்கள். இங்கே நிறைய பேர் வரிசையில் நிக்கிறாங்க" என்று ட்வீட் போடும் அளவுக்கு ரஜினி அரசியல் வருகை அமைந்துவிட்டது.
மண்டல பூஜை
திருச்சி அருகே உள்ள மணிகண்டத்தில் ரஜினி ரசிகர்கள் ரஜினியின் பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டியுள்ளனர். 48 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட இந்த மணிமண்டபத்தில் மண்டல பூஜை நடத்தப்பட்டு இன்று 48-வது நாளில் மண்டல அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த விழாவில் ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் கலந்து கொண்டு பூஜைகள் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது:
ரஜினி வருவார்
இந்த மணிமண்டபத்தை பார்க்க ரஜினிகாந்த் வருவார். அவர் தற்போது மிகவும் பிசியாக உள்ளார். ஆனால் இங்கு நடக்கும் நிகழ்வை அடிக்கடி போனில் கேட்டுக்கொண்டும், வீடியோவில் பார்த்துக் கொண்டும் உள்ளார்.மே 23-ந்தேதிக்கு பிறகு அவர் முக்கிய அறிவிப்பு வெளியிடுவார். ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அவர் தாமதம் செய்வதாக சிலர் கூறுகிறார்கள். தாமதம் செய்வது நல்லதுக்காகத்தான். அவர் தமிழக மக்களுக்கு நிறைய திட்டங்கள் வைத்திருக்கிறார்" என்றார்.