கூட்டணிகள் மாறும்.. வாய்ப்பை மிஸ்பண்ணக்கூடாது.. தேமுதிகவின் எம்பி சீட் கணக்கு இதுதான்!
சென்னை: எப்படியாவது இந்தமுறை ராஜ்யசபா எம்பி பதவியை அதிமுகவிடம் வாங்கி விட வேண்டும் என்று தேமுதிக முட்டிமோதி வருகிறது. ரஜினி கமலால் இனி கூட்டணி கணக்குள் எல்லமே மாறும் என்பதால் தேமுதிக அதிமுகவிடம் ராஜ்யசபா எம்பி சீட் கேட்டு நெருக்கி வருகிறது.
2011ல் தேமுதிகவுக்கு இருந்த மவுசு, 2016 சட்டமன்ற தேர்தல் வரை குறையாமல் இருந்தது. ஆனால் அதன்பிறகு தொடர் படுதோல்விகளால் சரிய ஆரம்பித்தது.
அதிமுக கூட்டணியில் இருந்து 2011ம் ஆண்டிலேயே வெளியேறி தேமுதிக அதன்பிறகு தொடர்ந்து அந்த கட்சியை கடுமையாக எதிர்த்து வந்தது. ஆனால் 2019 நாடாளுமன்ற தேர்தலில் திடீர் திருப்பமாக தேமுதிக அதிமுக கூட்டணியில் இணைந்தது. 4 இடங்களில்போட்டியிட்ட போதும் ஒரு இடத்தில் கூட தேமுதிக வெல்லவில்லை. இதேபோல் பாமாகவும் போட்டியிட்ட 7 தொகுதிகளில் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.
பாமகவுக்கு சீட்டு
எனினும் பாமகவுக்கு அதிமுக கடந்த ஆண்டு நடந்த ராஜ்யசபா தேர்தலில் எம்பி பதவி அளித்தது. இதன்படி அன்புமணி எம்பியாக பதவியேற்றார். அப்போதே தேமுதிகவும் தங்களுக்கும் ராஜ்யசபா எம்பி சீட் வேண்டும் என்று கோரி வந்தது. ஆனால் அப்போது அதிமுக சமாதான பதில்களை சொல்லி வாயடைக்க வைத்தது.
3 இடங்கள்
இந்நிலையில் தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. மொத்தம் ஆறு இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் அதிமுக, திமுக ஆகியவை தலா 3 இடங்களில் வெற்றி பெற முடியும். அதிமுகவிடம் 3ல் ஒரு இடத்தை எப்படியாவது கேட்டு வாங்க வேண்டும் தேமுகதிக பிடிவாதமாக உள்ளது.
கூட்டணி மாறும்
ரஜினி கட்சி ஆரம்பிக்க உள்ளதால் கூட்டணி நிலைப்பாடும் என்பது தேமுதிகவின் கணக்கு. இதேபோல் கமலும் தீவிரமாக கட்சி பணிகளில் இறங்கி உள்ளார். ஒரு பக்கம் திமுகவும், இன்னொரு பக்கம் அதிமுகவும் வலுவான கூட்டணி அமைக்க முயன்று வருகின்றன. தற்போது உள்ள கூட்டணியே நீடிக்காது என்பதால் எப்படியும் எம்பி பதவியை அதிமுக தரும் என தேமுதிக எதிர்பார்க்கிறது. எனவே கூட்டணி மாறுதல்கள் நடைபெற வாய்ப்பு உள்ள இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிவிடாமல் எம்பி சீட்டை வாங்கி விட வேண்டும் என பிரேமலதா கணக்கு போடுவதாக கூறப்படுகிறது..
சிஏஏ சட்டம்
சென்னை வேப்பேரியில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கலந்தது கொண்டார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் பேசுகையில், "டெல்லி வன்முறை என்பது முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது ஆகும். இங்கே குடியுரிமை சட்டம் பற்றி சரியான புரிதல் இல்லை. குடியுரிமைச் சட்டம் நாட்டிற்கு நலன் என்றால் அதனை நாங்கள் வரவேற்போம் அதேநேரத்தில் அது பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என்றால், அதனை முதல் ஆளாக தேமுதிகவே எதிர்க்கும்.
பதில் சொல்லவில்லை
குடியுரிமைச் சட்டம் எந்த ஒரு மதத்திற்கும் எதிரானது இல்லை. இச்சட்டத்தால் இங்கு வாழும் மக்களுக்கு பிரச்சினை இல்லை என்பதைப் புரியவைக்க வேண்டும். இதனை வைத்து அரசியல் செய்யக்கூடாது.டெல்லி வன்முறை தொடர்பாக ரஜினி கூறிய கருத்திற்கு நான் பதில் கூற விரும்பவில்லை.
முதல்வரை சந்திப்போம்
தமிழகத்தில் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலைப் பொறுத்தவரை, லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்கும்போது ஒரு ராஜ்யசபா எம்பி பதவி கொடுப்பதாகக் கூறினார்கள். நாங்கள் கூட்டணி தர்மத்தோடு உள்ளோம். இன்னும் இரு தினங்களில் தேமுதிக நிர்வாகிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து எங்கள் உரிமையைக் கேட்போம்" இவ்வாறு பிரேமலதா கூறினார்.