ராஜ்யசபா எம்பி தேர்தல்.. பாமகவின் அன்புமணி.. அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, அதிமுக முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் அதிமுக நகரச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் உள்ள 6 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கும் தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியது. இன்று மாலை 3 மணியுடன் நிறைவு பெறுகிறது. திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சண்முகம் மற்றும் வில்சன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டனர்.
இதேபோல் திமுக சார்பில் வைகோவுக்கு மாற்று வேட்பாளராக போட்டியிடும் என்.ஆர். இளங்கோ இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, அதிமுக முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் அதிமுக நகரச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார்கள்.
இந்த வேட்பு மனு தாக்கலின் போது முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவு பெறுகிறது. வேட்பு மனு பரிசீலனை நாளை நடைபெறுகிறது.
வைகோ வேட்பு மனு ஏற்கப்பட்டால் திமுக வேட்பாளர் என்ஆர் இளங்கோ தனது வேட்பு மனு வாபஸ் பெறுவார். எனவே எப்படி இருந்தாலும் தேர்தலுக்கு வாய்ப்பில்லை. திமுக மற்றும் அதிமுக சார்பில் தலா 3 பேரும் எம்பியாகப் போவது உறுதியாகி உள்ளது.