மாண்புமிகு மாநிலங்களவை எம்பி..அதிமுகவில் அவருக்கு சீட் கன்பார்ம்? இன்னொரு எம்பிக்கு தான் போட்டியாம்?
சென்னை : அதிமுக மாநிலங்களவை எம்பி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் பெரும் இழுபறி நீடிக்கும் நிலையில் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றொரு சீட்டுக்கு தான் தற்போது வரை கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேரதல் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயரை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொருட்டு அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், ஆனால் தற்போது வரை வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை.
இந்த 2 பேருக்காக போராடும் ஓபிஎஸ்.. அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவிப்பதில் இதனால்தான் தாமதம்!
மாநிலங்களவை எம்பி
தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம், வரும் ஜூன் மாதம் 21-ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் வெவ்வேறு நாள்களில் நிறைவடைகிறது. இதையடுத்து 57 இடங்களுக்கு ஜூன் மாதம் 10-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், ஜூன் மாதம் 10-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும். தேர்தலுக்கான அறிவிக்கை மே 24-ஆம் தேதி வெளியிடப்பட்டு, வழக்கம்போல், வாக்குப்பதிவு முடிந்த ஒரு மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது.
வேட்பாளர்கள் பட்டியல்
இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்களின் பட்டியலை கட்சித் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ஒரு சீட் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. விரைவில் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அக்கட்சியின் வேட்பாளர் யார் என்ற தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிச்சாமி திட்டம்
அதிமுக சார்பில் இதுவரை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படாமல் உள்ளது. அதற்கு காரணம் வேட்பாளரை தேர்வு செய்வதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களான எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இடையேயான மோதல் தான் காரணம் என சொல்லப்படுகிறது. தங்கள் தரப்பில் இருந்து வேட்பாளர்கள் நியமிக்க இருவரும் விரும்புவதால் இந்த குழப்பம் நீடிக்கிறது. அதே நேரத்தில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து வடமாவட்டங்களில் ஒருவரும் ஓபிஎஸ் தரப்பிலிருந்து தென்மாவட்டங்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கட்சியில் குழப்பம்
எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் 50-க்கும் மேற்பட்டோர் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தாலும் அவர்களில் இருவருக்கு முன்னுரிமை வழங்க எடப்பாடி பழனிசாமி முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் இருவர் முதல் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் என்பதும் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளில் தோல்வியடைந்துள்ளனர். ஆனாலும் திமுகவுக்கு பதிலளிப்பதாகட்டும், கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான உறவுப் பாலமாக இருவரும் நடிக்கின்றனர். அதிலும் தினமும் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடியாய் பேசி தற்போது வரை தினமும் தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் சென்னையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்படலாம் என உறுதியாகக் கூறுகின்றனர் அதிமுகவினர்.
ஓபிஎஸ் தடை
அந்த அமைச்சருக்கு எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் என இருவருமே ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இரண்டாவது வேட்பாளரை தேர்வு செய்வதில் தான் இன்னும் குழப்பம் நீடிக்கிறது கோவையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி ஒருவரும், தென்மாவட்டங்களில் முக்கிய பிரமுகராக வலம் வரும் ஒருவரும் தங்களுக்குத்தான் அந்த சீட்டினை ஒதுக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். இவர்களுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தடையாக நிற்கிறார்.
தொண்டர்கள் எதிர்பார்ப்பு
மேலும் தன் சொந்த ஊரிலே போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் துணை சபாநாயகர் ஒருவரின் மகனும், தமிழகத்தின் இரும்பு பாலத்துக்கு பெயர் போன ஊரின் மாவட்ட செயலாளரின் மனைவி ஒருவருக்கும் இந்த வேட்பாளர் பட்டியலுக்கான போட்டியில் இருக்கின்றனர். எது எப்படியோ வேட்பு மனுத்தாக்கல் தொடங்கவுள்ள நிலையில், அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் இடையே எழுந்து உள்ளது.