ராஜ்ய சபா சீட்.. அதிமுகவில் குழப்பம்.. ஆனால் இவங்க 2 பேரில் ஒருவருக்கு வாய்ப்பாம்!
ராஜ்ய சபா சீட் யாருக்கு என்பதில் அதிமுகவுக்குள் கடும் போட்டி நடக்கிறது
சென்னை: யாருக்கு சீட் தருவது என்று குழம்பி போகும் அளவுக்கு அதிமுகவை கட்சி சீனியர்கள் அதிகமாகவே நெருக்கடி கொடுத்து வருகிறார்களாம்.
அதிமுகவுக்கு 3 ராஜ்ய சபா சீட்களுக்கு வாய்ப்பு உள்ளது. ஒன்று அன்புமணிக்கு என்று அமைச்சர் ஜெயக்குமார் நேற்று உறுதிபடுத்தி விட்டார்.
மீதமுள்ள 2 சீட்டுகளை யாருக்கு தரலாம் என்பதில் பயங்கரமான போட்டி நடக்கிறது. இதில் ஒரு சீட்டை பாஜக கேட்டதாக சொல்லப்படுகிறது. அதன்படி கூட்டணி கட்சிக்கு போகுமா, அல்லது 2 சீட்டையுமே அதிமுக தன்னிடம் வைத்து கொள்ளுமா என தெரியவில்லை.
துணை முதல்வர்
ஆனால் எல்லா விஷயத்திலும் நீயா, நானா விவகாரம்போலவே, இந்த ராஜ்ய சபா சீட் விஷயத்திலும் முதல்வர், துணை முதல்வர் என 2 தரப்புகளும் தனித்தனியாக காய் நகர்த்தி வருகிறார்கள். இதில் முதல்வர் தரப்பில் லிஸ்ட்டில் உள்ளவர்கள், தம்பிதுரை, கேபி முனுசாமி, சேலம் அஸ்தப்பட்டி பகுதிச் செயலாளர் சரவணனும்தான். இவர் எடப்பாடியாரின் தீவிர ஆதரவாளராவார்.
அதிருப்தி
அதேபோல, துணை முதல்வர் தரப்பில் லிஸ்ட்டில் உள்ளவர்கள் மைத்ரேயன், மனோஜ்பாண்டியனும் ஆவார்கள். இதனிடையே இஸ்லாமியர்களின் அதிருப்தியில் இருந்து தப்பிக்க முஸ்லீம் வேட்பாளர்களாக அன்வர்ராஜா, தமிழ்மகன் உசேன், உள்ளிட்டோர் பெயர்களும் அடிபடுகின்றன.
ராஜ்ய சபா சீட்
இப்போது சிக்கல் என்னவென்றால், தனக்கு ஆதரவாளரான ஒருவர் டெல்லியில் இருக்க வேண்டும் என்று எடப்பாடி நினைக்கிறார். மற்றொரு புறம், ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளருக்கு சீட் தரவில்லையானால் கட்சிக்குள் குழப்பம், பூசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் ராஜ்ய சபா சீட் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
வாய்ப்பு
எனினும் இதில் 2 பேர் ரேஸில் உள்ளார்களாம். ஒருவர் கேபி முனுசாமி, மற்றொருவர் தமிழ்மகன் உசேன். இருவருமே சீனியர்கள். அந்த காலத்தில் இருந்து அதிமுகவில் இருப்பவர்கள். ஜெயலலிதா இருந்தபோது இவர்கள் இருவருக்குமே முக்கியத்துவம் அளித்து வந்தவர். அதனால் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
நிர்ப்பந்தம்
ஒருவேளை பாஜக தனக்கு ஒரு சீட் வேண்டும் என்று நிர்பந்தித்தால், அதிமுகவில் நிலைமை இன்னும் சிக்கல் ஆகும் என்கிறார்கள். இரட்டை தலைமையில் யார் சொல்லும் நபர்கள் போட்டியிடுவார்களோ மற்றொரு தரப்புடன் பூசல் அதிகரிக்கும். இதுபோக, சீட் கேட்டு கட்சிக்கு நெருக்கடி தரும் சீனியர்கள் என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பார்களோ, அதுவும் சந்தேகம்தான். இன்று, அல்லது நாளைக்குள் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.