ராஜ்யசபா சீட்.. வாசனை வைத்து அதிமுக கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்.. கொந்தளிப்பில் தேமுதிக
சென்னை: மாநிலங்களவை தேர்தலில், கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின், ஜி.கே.வாசனுக்கு அதிமுக வாய்ப்பு வழங்கியுள்ள நிலையில், தேமுதிகவுக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேமுதிக பொருளாளர் பிரேமலதா மிகவும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
தமிழகத்தில், காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கு கே.பி.முனுசாமி, தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர், ஜி.கே.வாசனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பேரும் ராஜ்யசபா செல்வது உறுதியாகிவிட்டது.
அதேநேரம், மற்றொரு கூட்டணி கட்சியான, தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் தரவில்லை. ஏற்கனவே பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாசுக்கு, அதிமுக ராஜ்யசபா சீட் கொடுத்தது, இப்போது தமிழ் மாநில காங்கிரசுக்கும் சீட் கொடுத்துள்ளது. ஆனால், அதிமுக கூட்டணியில், பெரிய கட்சிகளில் ஒன்று தேமுதிக. அக்கட்சிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
சுதீஷ்
இத்தனைக்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, தேமுதிகவின் சுதீஷ் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ராஜ்யசபா தேர்தலில் தங்களுக்கு இடம் தர வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். இந்த நிலையில்தான், இன்று அதிமுக வெளியிட்ட லிஸ்டில் தேமுதிகவில் யாருக்கும் ராஜ்யசபா சீட் தரவில்லை.
ஆவேசம்
இதைக் கேள்விப்பட்டதுமே, தமிழ் மாநில காங்கிரசை விடவா, தேமுதிக சின்ன கட்சியாக போய்விட்டது என கொந்தளித்துப் போயுள்ளாராம் பிரேமலதா விஜயகாந்த். இதனால் கூட்டணிக்குள் சிக்கல் எழும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமைய உள்ளது என பேசி வருகிறார் பிரேமலதா. ராஜ்யசபா சீட் விவகாரம், இந்த கொந்தளிப்பை இன்னும் கூட்டும் என்றே தெரிகிறது.
சாக்குப்போக்கு
ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில், உங்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்குகிறோம் என்று, அதிமுக தரப்பில், சமாதானம் பேசியுள்ளதாகவும், இதை ஏற்பதா இல்லையா என்று தேமுதிக யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில், அதிமுகவுக்கு ஆதரவை அதிகரிக்க ஜி.கே.வாசனை பயன்படுத்துவது அதிமுக தலைமை திட்டமாக இருக்கிறதாம். டெல்டா மாவட்டத்தில் திமுக வலுவாக உள்ளது. சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களின்போது அங்கு திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் அதற்கு சான்று.
டெல்டா டார்கெட்
இந்த நிலையில்தான், காவிரி டெல்டா மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க யோசித்து வருவதாகவும், அறிவிப்பு வெளியிட்டார். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பல திட்டங்களையும் அறிவித்தார். இந்த நிலையில்தான், வாசனையும் டெல்டாவில் அதிமுக வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்ள அதிமுக தலைமை திட்டமிட்டு காய் நகர்த்தியுள்ளது. இதன் மூலம், அங்கே கணிசமாக உள்ள முக்குலத்தோர் வாக்குகளை கவர முடியும் என்பதும் இதில் மற்றொரு திட்டம்.
அதுவா இருக்குமோ
வாசன், ஏற்கனவே மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். அவரது அனுபவம் மற்றும் டெல்லி தொடர்புகள் அதிமுகவுக்கு அவசியம் என அதிமுக நினைக்கிறது. ஆனால், டெல்லியில் தேமுகவுக்கு களம் இல்லை, அனுபவம் இல்லை என்பதால், கல்தா கொடுக்கப்பட்டுள்ளதாம். மேலும், லோக்சபா தேர்தலின்போது, அரசியல் பகைகளை மறந்து, திமுக தலைவர் ஸ்டாலின் விஜயகாந்த்தை அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்து நலம் விசாரித்து விட்டு வந்தார். அப்படியிருந்தும், கடைசிவரை இழுத்தடித்துவிட்டு, அதிமுக பக்கம் போனது தேமுதிக. திமுக பக்கம் காற்று வீசிய தேர்தல் என தெரிந்தும், வெற்றிக்கான கட்டாயத்தில் இருந்த தேமுதிக எதற்காக, அதிமுக பக்கம் போனது? இதன் பின்னணி என்னவாக இருக்கும் என பல யூகங்கள் கிளம்பிய வண்ணம் உள்ளன. தேமுதிகவை, தமிழ் மாநில காங்கிரஸ் அளவுக்கு கூட அதிமுக முக்கியத்துவம் தராமல் நடந்து கொள்வது, அந்த யூகங்கள் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை, மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன!
டெல்லி லாபி
வாசனுக்கு டெல்லியிலுள்ள பாஜக தலைவர்களிடம் வாய்ஸ் இருக்கிறது. அவ்வப்போது டெல்லி சென்ற வாசன், அங்குள்ள தலைவர்களிடம் லாபி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில்தான், அவருக்கு அதிமுக ராஜ்யசபா சீட் கொடுக்க முன் வந்துள்ளது. எனவே, வாசனுக்காக என்று மட்டுமின்றி, பாஜகவின் கோரிக்கைக்காகவும், அதிமுக செவி சாய்த்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் தேமுதிகவில், பாஜக தலைவர்களிடம் உள்ள நெருக்கம் சுத்தமாக நின்று போய்விட்டது.