மதுரையிலிருந்து சென்னை வந்த வைகோ.. மீண்டும் உடல்நலக் குறைவால் போரூர் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: சென்னையில் போரூர் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு இது இரண்டாவது இன்னிங்க்ஸாகியுள்ளது. தற்போது அவரது கட்சி சின்னத்திற்கேற்ப பம்பரம் போல் அரசியலில் சுற்றி வருகிறார்.
மாநிலங்களவை உறுப்பினர் ஆனவுடன் நாடாளுமன்றத்தில் தனது வெங்கல குரலால் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை எழுப்பி வருகிறார். இந்த நிலையில் அவர் நிறைய வழக்குகளில் ஆஜராகி வாதிடுவதாலும் பொது விழாக்களில் கலந்து கொள்வதாலும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓய்வின்றி செயல்பட்டு வருவதாலும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை முடிந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மதுரையிலிருந்து சென்னை வரும் வைகோவை யாரும் பார்க்க வரவேண்டாம் என்றும் போனிலோ, செல்போனிலோ அவரை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் மதிமுக அறிக்கை வெளியிட்டது. மேலும் இரு வாரங்களுக்கு வைகோ கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில் மதுரையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வைகோ வந்தார். அப்போது அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.