அயோத்தியில் ராமர் கோவில் - இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறுகிறது - துணை முதல்வர் ஓபிஎஸ்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணி தொடங்க உள்ளதை அடுத்து துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் வாழ்த்து கூறியுள்ளார்.
சென்னை: அயோத்தியில் இன்று ராமர் கோவில் கட்டுமானப்பணிக்கான பூமி பூஜை நடைபெற உள்ளதை முன்னிட்டு அடிக்கல் நாட்ட உள்ள பிரதமர் மோடிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து கூறியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தினை பதிவு செய்துள்ளார் ஓ. பன்னீர் செல்வம்
ஓ. பன்னீர் செல்வம் தனது வாழ்த்து செய்தியில் இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறும் வண்ணம் வரலாற்றுச் சிறப்பு மிக்க "அயோத்தியில் இராமர் கோவில்" கட்டுவதற்கான பூமிபூஜை விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து, அடிக்கல் நாட்டவுள்ள மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அயோத்தி வரலாற்றில் இன்றைய தினம் முக்கியத்துவம் வாய்ந்தது. ராம பக்தர்களின் பல ஆண்டுகால கனவு நிறைவேறப்போகிறது. பல ஆண்டு கால சட்டப்போராட்டத்திற்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. இந்த கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெறுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். இன்றைய தினம் அயோத்தி வரும் பிரதமர் மோடி முதல் வெள்ளி செங்கலை எடுத்துக்கொடுத்து அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைக்கிறார். பூமி பூஜை விழா நடைபெறுவதால் அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பஜனைகள் ஒருபக்கம் நடைபெற உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.