இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் உடல் திருச்சியில் இன்று நல்லடக்கம்
சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று காலமான இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் (94) உடல் திருச்சியில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் வயது மூப்பு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
நேற்று அவரது உடல்நிலை மோசமானதால் மாலை அவர் காலமானார். கொரோனா பாதிப்பால் அவர் இறந்ததால் அவரது உடல் பொது சுகாதார பணியாளர்களிடம் பாதுகாப்பான முறையில் ஒப்படைக்கப்பட்டது.
ஆம்புலன்ஸில் கண்ணாடிக்குள் வைக்கப்பட்டிருந்த உடலை பார்க்க இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் அவரது உடல் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு பலத்த பாதுகாப்புடன் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
இதையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. திருச்சி மாவட்டம் உறையூர் சீராப்தோப்பு, குழுமணி இந்து முன்னணி பண்பாட்டு கல்லூரி வளாகத்தில் அவரது உடல் இன்று காலை அடக்கம் செய்யப்படுகிறது. கொரோனா தொற்றால் ராமகோபாலன் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரது இறுதிச் சடங்குகளை சுகாதார பணியாளர்களே நடத்துகிறார்கள்.