தமிழகம் உட்பட இந்தியா முழுக்க இன்று துவங்கிய ரமலான் நோன்பு! வீட்டிலேயே தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள்
சென்னை: தமிழகத்தில் ரமலான் நோன்பு இன்று தொடங்கியது. இஸ்லாமியர்கள் வீட்டிலேயே நோன்பு துவங்கினர்.
Recommended Video
இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் முக்கியமானது ரமலான் நோன்பு ஆகும். காலை சூரிய உதயத்துக்கு முன்பிருந்து, சூரியன் மறையும் நேரம் வரை, உணவு மற்றும் தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல், நோன்பு கடைப்பிடிப்பார்கள். ரமலான் நாட்களில் ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை தொழுகை மட்டுமின்றி, இரவிலும் சிறப்பு தொழுகை நடத்தி பிரார்த்தனை செய்வது வழக்கமான ஒன்றாகும்.
இது இஸ்லாமின் ஐந்து அடிப்படை கடமைகளில் மூன்றாவது கடமை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகளில் வெள்ளிக்கிழமையான நேற்று தொடங்கியது.
இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று மாலை பிறை தெரிந்ததாக தமிழக அரசின் தலைமை காஜி சலாஹுத்தீன் முஹம்மது அயூப் அறிவித்தார். எனவே, தமிழகத்தில் ரமலான் நோன்பு, சனிக்கிழமையான இன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
குழந்தைகளின் கால்விரல்கள் புண்ணாதல்.. கொரோனாவின் புதிய அறிகுறியாக இருக்கலாம்.. மருத்துவர்கள் பகீர்
கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மசூதிகளில் தொழுகை நடத்த வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், இஸ்லாமியர்கள் வீடுகளிலிருந்தபடியே நோன்பை ஆரம்பித்துள்ளனர். நோன்பு திறப்பின்போதும் வீடுகளிலேயே தொழுகை நடத்த முடிவு செய்துள்ளனர்.
வழக்கமாக நோன்பு திறப்பு நேரத்தில், விதவிதமான உணவு பண்டங்கள், விற்பனை செய்யப்படும். இப்போது ஊரடங்கு உத்தரவு இருப்பதால், அதுபோன்ற கடைகள் திறக்காது. எனவே வீட்டில் சமையல் செய்து நோன்பு திறக்க உள்ளனர் இஸ்லாமிய மக்கள்.