நோயாளிகள் அல்லல்படும் போது... ஆக்சிஜன் படுக்கைகளை முடக்கி வைத்திருப்பது ஏன்..? -ராமதாஸ்
சென்னை: ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கைகளைக் கொண்ட பிரிவு செயல்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருப்பது ஏன் என ராமதாஸ் வினவியுள்ளார்.
பலரின் உயிரிழப்புக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் காரணமாக இருக்கக் கூடாது என அவர் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தடுப்பூசி போடுவதற்கு முன்பும், பின்பும் இரத்த தானம் செய்யலாமா? இதோ டாக்டரின் பதில்கள்.. இதை படியுங்க
கொரோனா வைரஸ்
சென்னையில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல், உயிருக்குப் போராடி வரும் நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கைகளைக் கொண்ட பிரிவு செயல்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசு மருத்துவமனை
தெற்காசியாவின் முதன்மையான 10 மருத்துவமனைகளில் சென்னை ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனை குறிப்பிடத்தக்கதாகும். ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டு, அனைத்துவகையான மருத்துவ சேவைகளையும் அளிக்கும் மருத்துவ நிறுவனமாக உயர்ந்து நிற்கும் இந்த மருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச்சிறப்பான மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
ராமதாஸ் கவலை
அதே நேரத்தில் இந்த மருத்துவமனையின் மிகச்சிறப்பான கட்டமைப்புகள் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பயன்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையில் முடவியல் தொகுதியில் (Rheumatology Block) உள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 120 படுக்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான காரணம் புரியவில்லை.
ஆக்சிஜன் வசதி
தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி கரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகள் மற்றும் வீட்டுத் தனிமையில் மருத்துவம் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1.25 லட்சத்தைத் தாண்டிவிட்டது. இவர்களில் சுமார் 50,000 பேர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் பெரும்பான்மையினருக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தேவைப்படுகின்றன.
படுக்கை இல்லை
இத்தகைய சூழலில் முடவியல் தொகுதியில் உள்ள ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் பொக்கிஷம் ஆகும். அவற்றைப் பயன்படுத்தாமல் முடக்குவது நல்லதல்ல. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒவ்வொரு நாளும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா நோயாளிகளுடன் சராசரியாக 40 அவசர ஊர்திகள் ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆக்சிஜன் படுக்கை இல்லை என்று கூறி திருப்பி அனுப்பப்படுகின்றன.
முடவியல் தொகுதி
நேற்று கூட அவசர ஊர்திகளில் வந்த சுமார் 20 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் படுக்கை இல்லை என்று கூறி திருப்பி அனுப்பப்பட்டனர். முடவியல் தொகுதியில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சைப் பிரிவு திறக்கப்படாததால் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவம் கிடைக்காமல் தவிக்கின்றனர். அவர்களுக்கான மருத்துவ வாய்ப்புகளை முடக்கி வைத்து, அவர்களில் பலரின் உயிரிழப்புக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை காரணமாக இருக்கக் கூடாது.
உடனடியாக முடவியல் தொகுதியை கொரோனா சிறப்பு மருத்துவப் பிரிவாக அறிவித்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருத்துவம் அளிக்க அரசு முன்வர வேண்டும்.