வாட்ஸ் அப் மூலம் ஒட்டு கேட்பு- இஸ்ரேல் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்க ராமதாஸ் வலியுறுத்தல்
Recommended Video
சென்னை: அரசியல் தலைவர்களின் செல்பேசிகளை வாட்ஸ் அப் மூலம் ஒட்டு கேட்கும் இஸ்ரேல் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வாட்ஸ் அப் விவகாரம், காவிரி நீர் பிரச்சனை உள்ளிட்டவைகள் குறித்து டாக்டர் ராமதாஸ் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இந்தியாவில் அரசியல் தலைவர்களின் செல்பேசிகள் வாட்ஸ்-ஆப் மூலம் ஒட்டுக்கேட்கப் பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. வாட்ஸ்-ஆப் நிறுவனத்திடம் மட்டுமின்றி, இதற்கு காரணமான பிகாசஸ் மென்பொருளைத் தயாரித்த இஸ்ரேல் நிறுவனத்திடமும் மத்திய அரசு விளக்கம் கேட்க வேண்டும்!
காவிரி நீர்
கர்நாடகத்திலிருந்து காவிரியில் திறந்து விடப்படும் கழிவு நீரால் மேட்டூர் நீர்த்தேக்கத்தில் காவிரி நீர் பச்சையாக மாறி, துர்நாற்றம் வீசுவது கவலையளிக்கிறது. தமிழகத்தை வடிகாலாக பயன்படுத்தி வந்த கர்நாடகம், இப்போது சாக்கடையாக மாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது. இது தடுக்கப்பட வேண்டும்!
பிளாஸ்டிக் ஒழிப்பு
தெலுங்கானா மாநிலம் முளுகு மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு ஒரு கிலோ அரிசி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது; இத்தகைய நவீன முயற்சிகள் தொடர வேண்டும்!
மாஞ்சாநூல்
சென்னை கொருக்குப்பேட்டையில் மாஞ்சாநூல் கழுத்தை அறுத்ததால் 3 வயது சிறுவன் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உயர்நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும் கூட மாஞ்சா நூல் கொடுமை தொடர்வது கண்டிக்கத்தக்கது. பட்டம் விடும் பொழுதுபோக்கு உயிரைப் பறிக்கும் கொலைச் செயலாக மாறிவிடக் கூடாது!
வெங்காய விலை
சில்லறை சந்தையில் வெங்காயத்தின் விலை கிலோ 80 ரூபாயைத் தாண்டி, 100 ரூபாயை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. விலைக்கட்டுப்பாடுகள், இறக்குமதி, பண்ணை பசுமைக் கடைகளில் விற்பனையை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!