மொத்தம் 4 கட்டம்.. படத்துடன் கொரோனாவின் நிலைகளை விளக்கிய டாக்டர் ராமதாஸ்.. சூப்பர்!
சென்னை: கொரோனா வைரஸின் 4 நிலைகள் என்னென்ன என்பதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கியுள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அது போல் தமிழகத்திலும் 600-ஐ தாண்டியது. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் சீனா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் 3ஆவது கட்டத்தை அடைந்துள்ளது. இது மிகவும் ஆபத்தான கட்டமாகும். அரசுகளின் அலட்சியத்தால் இந்த கட்டத்தை அடைந்து அங்கு உயிரிழப்புகள் அதிகமாகியுள்ளது.
4 நிலைகள்
இந்த 3ஆவது கட்டமாக சமூக பரவலை தடுக்கவே இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பின் 4 நிலைகள் என்னென்ன என்பது மக்களுக்கு ஓரளவுக்கு தெரிந்திருந்திருக்கும்.
|
தகவல்கள்
அதை அனைவரும் புரிந்து கொள்ளும்படியாக பாமக நிறுவனர் ராமதாஸ் அழகாக விளக்கப்படங்களுடன் விளக்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் கொரோனா வைரஸ் பரவும் நிலையை நான்கு கட்டங்களாக பிரிக்க முடியும். இது குறித்து இளைஞர்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் நோக்குடன் கீழ்க்கண்ட தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கட்டம் 1
கட்டம் 1- வெளிநாட்டு பயணத்தின் மூலம் வரும் தொற்று (டிராவல் ஹிஸ்டரி): கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்தவர்கள் கொரோனா தொற்று இருப்பது தெரியாமல் திரும்பி வரும் போது விமான நிலைய சோதனைகளின் மூலம் தொற்று இருப்பது கண்டறியப்படும் நிலை இது.
கட்டம் 2
கட்டம் 2- உள்ளூர் பரவல் (லோக்கல் டிரான்ஸ்மிஷன்): வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு குறிப்பாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பரவுவது. இந்த நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது எளிது. இந்தியா இப்போது இந்த இரண்டாவது நிலையில்தான் உள்ளது.
கட்டம் 3
கட்டம் 3- சமுதாயப் பரவல் (Community transmission): இது மிகவும் ஆபத்தான நிலை. யாரிடமிருந்து யாருக்கு பரவுகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வேகமாக பரவும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் அவரையும் அறியாமல் ஒரு கூட்டத்தில் இருந்தால் அவர் மூலம் நூற்றுக்கணக்கானோருக்கு பரவும். தென் கொரியா போன்ற சில நாடுகள் இந்த கட்டத்திற்கு சென்று மீண்டன.
கட்டம் 4
கட்டம் 4- தொற்று நோயாக பரவல் (Epidemic stage): கொரோனா வைரஸ் தொற்று நோயாக பரவுவது தான் 4ஆவது நிலையாகும். இந்த நிலையில் நோய்ப் பரவலை கட்டுப்படுத்த முடியாது. இது மிக மிக மோசமான நிலையாகும். சீனா இந்த நிலைக்கு சென்றுதான் மீண்டது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் இந்த நிலையில் தொடக்கத்தில் உள்ளன. இவ்வாறு 4 நிலைகளை ராமதாஸ் விளக்கியுள்ளார்.