இந்தியாவில் சபிக்கப்பட்ட சமுதாயம் என்றால்... அது உழவர்கள் தான்... ராமதாஸ் வேதனை
சென்னை: இந்தியாவில் இன்றைய நிலையில் சபிக்கப்பட்ட சமுதாயம் என்றால், அது உழவர் சமுதாயம் தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
எந்த சட்டத்தாலும் உழவர்களின் நலன்கள் இம்மியளவும் பாதிக்கப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சென்னைக்கு ஹேப்பி நியூஸ்.. 25,000 ரெம்டெசிவிர் மருந்து வந்து சேர்ந்தது.. கொரோனா சிகிச்சைக்கு!
உழவர்கள் நலன்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட உழவர்களின் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (மேம்பாடு மற்றும் வசதிகள்) மசோதா, உழவர்களுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா ஆகியவையும், அவற்றால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த உழவர்களின் அச்சமும் தான் நாட்டின் முக்கிய விவாதமாக மாறியுள்ளன. எந்த சட்டத்தாலும் உழவர்களின் நலன்கள் இம்மியளவும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
அரசுகளின் கடமை
நாடாளுமன்றத்தில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள இரு சட்டங்களாலும், மாநிலங்களவையில் இனி நிறைவேற்றப்படவுள்ள அத்தியாவசியப் பொருட்கள்(சட்டத்திருத்த) மசோதாவாலும் வேளாண் விளைபொருட்களை அரசுத்துறை நிறுவனங்கள் கொள்முதல் செய்வது காலப்போக்கில் நிறுத்தப்பட்டு விடும்; அதனால் வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கும் வழக்கமும் இல்லாமல் போய்விடும் என்பது தான் உழவர்களின் அச்சமாகும். இது குறித்த உத்தரவாதம் சட்ட மசோதாக்களில் இல்லாத சூழலில் உழவர்களின் இந்த அச்சம் நியாயமானது தான். உழவர்களின் இந்த அச்சத்தைப் போக்கி, பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசுகளின் கடமையாகும்.
சட்டமாக்குக
உழவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், நேரடி கொள்முதல் முறையும், குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யும் முறையும் தொடரும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உறுதியளித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது தான். பிரதமரின் இந்த அறிவிப்பை சட்டமாக்கி விட்டால், நாடு முழுவதுமுள்ள உழவர்களின் அச்சத்தை முழுமையாக நீக்கிவிட முடியும்.
அரும்பாடுபட்டு
இந்தியாவில் இன்றைய நிலையில் சபிக்கப்பட்ட சமுதாயம் என்றால், அது உழவர்கள் தான். அவர்கள் பயிரை சாகுபடி செய்யும் போது இயற்கைச் சீற்றங்களின் தாக்குதல்களால் பாதிக்கப்படுகின்றனர். சாகுபடி செய்து முடித்த பிறகு அவற்றுக்கு உரிய விலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். உழவர்கள் அரும்பாடுபட்டு விளைவித்த பயிர்களுக்கு உரிய விலை என்றைக்கு கிடைக்கிறதோ, அன்றைக்கு தான் விவசாயம் லாபம் நிறைந்த தொழிலாக மாறும்; உழவர்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும்.
ராமதாஸ் வலியுறுத்தல்
உழவுத்தொழிலை லாபமானதாக மாற்ற வேண்டுமானால், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைத்தவாறு வேளாண் விளைபொருட்களுக்கு, அவற்றின் உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்.